வருவாங்க... வருவாங்க.. எங்க போயிடப் போறாங்க! - தினகரன் குரூப்பின் அசால்ட் நம்பிக்கை!!
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக உள்ள அனைவரும் விரைவில் தினகரனுக்கு ஆதரவாக வருவார்கள் என அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமியும், ஓ பன்னீர் செல்வமும் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தினகரனுக்கு ஆதரவாகவும் 19 எம்எல்ஏக்கள் வெளிப்படையாக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். மேலும் 20 எம்எல்ஏக்கள் தினகரனுக்கு ஆதரவாக உள்ளதாகவும், அவர்கள் நேரம் வரும்போது வெளிப்படையாக தினகரனை ஆதரிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

புதுவையில்...
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேரும் புதுவையில் ஒரு ரிசார்ட்டில் தங்கி 'ஓய்வெடுத்து' வருகின்றனர். சென்னையில் தொந்தரவு அதிகம் என்பதால் இந்த ரிசார்ட்டில் தங்கி இருப்பதாகத் தெரிவித்தனர்.

மேலும் எம்எல்ஏக்கள்
இவர்களுக்கு தலைமை தாங்கும் தங்க தமிழ்ச்செல்வன் எம்எல்ஏ, மேலும் பல எம்எல்ஏக்கள் தங்கள் அணிக்கு வருவார்கள் என்று கூறி வருகிறார்.

வருவாங்க வருவாங்க
"அந்தப் பக்கம் இருக்கும் பல எம்எல்ஏக்கள் எங்கள் அணிக்கு நிச்சயம் வருவார்கள். எங்கே போய்விடப் போகிறார்கள்... தினகரன் பக்கம் நியாயமிருக்கிறது... இந்தக் கட்சியை அவரால் மட்டும்தான் கட்டிக் காக்க முடியும்... துரோகிகளுடன் கை கோர்த்திருக்கும் இந்த அரசின் தலைமையை மாற்ற வேண்டும்," என்று தங்க தமிழச்செல்வன் கூறியுள்ளார்.

அடுத்து பெங்களூரா?
புதுவையில் தங்கியுள்ள தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரும், அங்கிருந்து பெங்களூருக்குச் செல்லக்கூடும் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications