விவசாயிகளை பாதிக்காமல் மாற்று வழியில் கெயில் திட்டம்: கருணாநிதி யோசனை
சென்னை: விவசாயிகளுக்கு எந்தவிதமான பாதகமும் ஏற்படாத வகையில் கெயில் திட்டத்தை மாற்றுவழியில் மேற்கொள்ள வேண்டுமென்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையில் கெயில் நிறுவனம் குழாய்களைப் பதிப்பதில் ஆட்சேபணை இல்லை. ஆனால் அந்தக் குழாய்கள் விளை நிலங்களையும், விவசாயிகளையும் பாதிக்காமல் பதிக்கப்பட வேண்டுமென்று தொடக்கத்திலிருந்து கூறி வருகிறோம்.

தேசிய நெடுஞ்சாலைகள் வழியாக எரிவாயுக் குழாய்களைப் பதித்து, திட்டத்தைச் செயல்படுத்துமாறு 2013ஆம் ஆண்டு தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து கெயில் நிறுவனம் தொடுத்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசின் ஆணைக்குத் தடை விதித்தது.
இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இரண்டாண்டுகளுக்குப் பிறகு தற்போது உச்ச நீதிமன்றம் "கெயில் நிறுவனத்திற்குத் தடை விதித்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணை ரத்து செய்யப்படுகிறது. தமிழகத்தில் கெயில் நிறுவனம் உத்தேசித்த எரிவாயு திட்டத்தை விவசாய நிலங்களின் வழியாகவே செயல்படுத்தலாம்" என்று உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு காரணமாக தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சியினரும் விவசாயிகளும் பெரிதும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். எனவே இந்த நிலையில், தமிழக அரசு உடனடியாக இந்தத் தீர்ப்பை எதிர்த்து "சீராய்வு" மனு தாக்கல் செய்தோ, அல்லது விவசாயிகளுக்கு எந்தவிதமான பாதகமும் ஏற்படாத வகையில், அனைத்துத் தரப்பினரிடமும் கலந்து பேசியோ ஒரு சுமூக முடிவு காண்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென்று கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications