இந்திய அரசு கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.. திருமாவளவன் கோரிக்கை
நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக பாடுபட்ட கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை: மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு கோபாலபுரத்துக்கு சென்று அஞ்சலி செலுத்திய விசிக தலைவர் திருமாவளவன், இந்திய அரசு கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு காவேரி மருத்துவமனையில் காலமானார். அவருடைய உடல் காவேரி மருத்துவமனையிலிருந்து அவருடைய கோபாலபுரம் இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கோபாலபுரம் சென்று கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டின் நலனுக்காகவும் இந்திய ஒருமைப்பாட்டுக்காகவும் பாடாற்றிய கருணாநிதியை சிறப்பிக்கும் வகையில், இந்திய அரசு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி சிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
மெரினாவில் அண்ணா சமாதி வளாகத்தில் திமுக சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. பரிசீலிப்பதாக சொன்ன தமிழக அரசு கடைசி நேரத்தில் அனுமதி மறுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது தமிழகத்தில் தேவையற்ற ஒரு பதற்றச் சூழலை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
அதைப்போல திமுக தலைவர் கருணாநிதியை அண்ணா சமாதி வளாகத்தில் நல்லடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும். தமிழக முதல்வர் தம்முடைய நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும். தமிழகம் முழுவது ஒரு கொந்தளிப்பு ஏற்படுவதற்கு முன்னதாக தமிழக அரசு விரைந்து முடிவெடுக்க வேண்டும். அவரை திமுகவின் தலைவர் என்று மட்டும் பார்க்க கூடாது.
அவர் ஒட்டுமொத்த தமிழினத்தின் தலைவர். ஐந்துமுறை தமிழகத்தை முதல்வராக ஆண்ட ஒரு மகத்தான தலைவர். அதனால், தமிழ்ச் சமூகத்தின் மனதில் இடம்பிடித்தவர் என்ற வகையில், அண்ணாவின் இதயத்தில் நீங்கா இடம் பெற்றவர் என்ற வகையில், அவருடைய விருப்பம் போல கருணாநிதியை அண்ணா சமாதி வளாகத்தில் நல்லடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தினார்.












Click it and Unblock the Notifications