கருணாநிதி பற்றிய வைகோ பேச்சுக்கு நோட்டீஸ்.. தேர்தல் ஆணையம் மீது திருமா. பகீர் குற்றச்சாட்டு
சென்னை: கருணாநிதி பற்றி வைகோ கூறிய சர்ச்சைக்குறிய கருத்துக்கு அவர் மன்னிப்பு கேட்டுவிட்ட பிறகும், தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது உள்நோக்கம் கொண்ட நடவடிக்கை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டினார்.
பத்திரிகையாளர் சந்திப்பின்போது, மதிமுக பொதுச்செயலர் வைகோ, திமுக தலைவர் பெருமதிப்புக்குறிய கருணாநிதி பற்றி வாய் தவறி ஒரு கருத்தை கூறினார். பிறகு வைகோ அதை திரும்ப பெறுவதாக கூறியதோடு, வருத்தமும் தெரிவித்துவிட்டார்.
இந்த நிலையில், வைகோ பேச்சுக்கு விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சட்டம்-ஒழுங்கு சார்ந்த ஒரு நிகழ்வில் தேர்தல் ஆணையம் தலையிட்டது, எனக்கு தெரிந்து, இதுதான் முதல்முறை.
இதுபோன்ற பிரச்சினைகளில் புகார் கொடுக்கப்பட்டால், அதை காவல்துறைதான் விசாரிக்கும். முதல் முறையாக தேர்தல் ஆணையம் இதுகுறித்து விசாரிக்க முன்வந்துள்ளது ஆச்சரியமளிக்கிறது.
தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை, உள்நோக்கம் கொண்டது. வைகோ அல்லது அவர் சார்ந்துள்ள கூட்டணிக்கு எதிராக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்பதற்கான ஆதாரம்தான் இந்த நடவடிக்கை.
ஒரு கருத்தை திரும்ப பெற்றதோடு, மன்னிப்பும் கேட்டபிறகும், அதுகுறித்து விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது தேவையற்ற செயல். இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.