பாஜக விரிப்பது பாசவலை அல்ல... சதி வலை.. உஷார்.. ரஜினிக்கு திருமாவளவன் எச்சரிக்கை
பாஜக விரிக்கும் வலை பாசவலை அல்ல. அது சதி வலை என்று ரஜினிக்கு விசிக தலைவர் திருமாவளவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை: கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்களை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் புகைப்படம் எடுத்துக் கொண்டதே அரசியல் பரபரப்பாகிவிட்டது.
தமிழகம் முழுவதும் உள்ள 15 மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை சந்தித்த அவரது, கடைசி நாள் உரை அரசியல் தலைவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஸ்டாலின், திருமாவளவன், அன்புமணி, சீமான் போன்றவர்கள் அரசியலில் இருந்தாலும் சிஸ்டம் சரியில்லை என்று ரஜினிகாந்த் பேசியது தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பியது. இதற்கு பல அரசியல் கட்சித் தலைவர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதே வேளையில் பாஜக தலைவர்கள் அனைவரும் ரஜினியை தங்கள் பக்கம் இழுக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

பாஜகவில் இணைய..
இதுகுறித்து திருமாவளவன் பேசிய போது, பாஜக போன்ற வகுப்பு வாத கட்சிகளுடன் உறவு வைத்துள்ளார் ரஜினி என்றும், அவர் விரைவில் அந்தக் கட்சியில் இணையப் போகிறார் என்றும் பலர் விவாதிக்கின்றனர். இதில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்று தெரிய வில்லை என்று திருமாவளவன் கூறினார்.

அமித்ஷா அழைப்பு
பாஜகவின் தேசிய தலைவர் அமித் ஷா ரஜினிகாந்த்திற்காக கதவு திறந்தே வைத்திருப்பதாக கூறியுள்ளார். ரஜினிகாந்த் தனது தனித்தன்மையை விட்டு கொடுக்காமல் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.

சதி வலை
பாஜக தலைவர் அழைப்பது பாசவலை அல்ல. சதி வலை என்பதை ரஜினிகாந்த் புரிந்து கொள்ள வேண்டும். ரஜினி உஷாராக இருப்பது நல்லது என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

லைகா நிகழ்ச்சி எச்சரிக்கை
ஏற்கனவே, இலங்கையில் லைகா ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிக்கு ரஜினி போகக் கூடாது. அரசியல் உள்நோக்கத்துடன் நடத்தப்படும் நிகழ்ச்சிக்கு செல்வதால் ரஜினிக்கு கெட்டப் பெயர் ஏற்படும் என்று திருமாவளவன் எச்சரித்தார். அதனைத் தொடர்ந்து பலரும் ரஜினிக்கு கண்டனம் தெரிவித்தனர். அதனை ஏற்று ரஜினி இலங்கைக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே போன்று திருமாவளவனின் பாஜக குறித்த எச்சரிக்கையை இப்போது ஏற்பாரா ரஜினி?












Click it and Unblock the Notifications