கர்நாடகாவில் போராட்டத்தில் ஈடுபடுவது மதவாத அமைப்புகள்.... திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு
வேலூர்: கர்நாடகாவில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மதவாத அமைப்புகள்தான் போராட்டம் நடத்துகின்றன என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிராக உச்சகட்ட வன்முறை கவிழ்த்துவிடப்பட்டுள்ளது. இதனால் பல லட்சம் தமிழர்கள் பெங்களூரு உள்ளிட்ட நகரங்களை விட்டு வெளியேறி தமிழகம் திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.
இத்தனை ஆண்டுகாலமாக உழைத்த சொத்துகளை அப்படியே விட்டு உயிர் பிழைத்தால் போதும் என வெறுங்கையோடு தமிழகம் திரும்புகின்றனர் தமிழர்கள். சாரை சாரையாக தமிழர்கள் ஓசூர் வழியாக வெளியேறுகின்றனர்.
இது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வன்முறைகள் திட்டமிட்ட சதி என திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்தார்.
இதனிடையே வேலூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக கர்நாடகாவில் மதவாத அமைப்புகள்தான் போராட்டம் நடத்துகின்றன. இந்த போராட்டங்கள் தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரானது என சாடினார்.