பணமில்லா பரிவர்த்தனை- பல்கலை. துணை வேந்தர்களுக்கு ஆளுநர் உத்தரவிடுவதா? திருமாவளவன் கண்டனம்
பல்கலைக் கழக துணை வேந்தர்களுக்கு ஆளுநர் உத்தரவிட்டு அறிக்கை வெளியாகி உள்ளதற்கு திருமாவளவன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சென்னை: பணமில்லா பரிவர்த்தனை தொடர்பாக தமிழக பல்கலைக் கழகத் துணைவேந்தர்களுக்கு பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டிருப்பதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திருமாவளவன் இன்று வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக இருக்கும் திரு வித்யாசாகர் ராவ் அவர்கள் நேற்று வெளியிட்டிருக்கும் பத்திரிகை குறிப்பில் தமிழகத்திலிருக்கும் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு உத்தரவு ஒன்றை அவர் பிறப்பித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. " துணைவேந்தர்களும் பதிவாளர்களும் தமது பல்கலைக்கழகங்களிலும் அவற்றுடன் இணைக்கப்பட்ட கல்லூரிகளிலும் பணமில்லாத பரிவர்த்தனை முறைகளைக் கடைபிடிக்கவேண்டும், தினசரி நடைமுறைகளுக்கு எலக்ட்ரானிக் பரிவர்த்தனையைக் கையாளவேண்டும். பணமில்லா சமூகத்தை உருவாக்க பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தியிருக்கும் திட்டத்துக்கு ஏற்ப இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இது தொடர்பாக எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்த காலவரையறையுடன்கூடிய செயல்திட்டத்தைத் தயாரிக்கும்படியும் அது செயல்படுத்தப்பட்டது குறித்த அறிக்கையை ஆளுநருக்கு சமர்ப்பிக்கவேண்டும்" ன அந்த உத்தரவில் சொல்லப்பட்டிருப்பதாகவும் ஆளுநர் மாளிகையின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
அதிகாரத்தில் தலையீடு
ஆளுநரின் இந்த உத்தரவு மாநில அரசின் அதிகாரத்திலும் பல்கலைக்கழகங்களின் நிர்வாகத்திலும் தலையிடுவதாக உள்ளது. மாநில அரசு கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி நடக்கும் மாநிலங்களில்தான் இப்படியான நடவடிக்கைகளை ஆளுநர்கள் எடுப்பது வழக்கம்.
ஆளுநருக்கு அதிகாரம் இல்லை
தமிழக பொறுப்பு ஆளுநரின் இந்த நடவடிக்கை தமிழ்நாட்டில் நடப்பது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் ஆட்சியா அல்லது குடியரசுத் தலைவரின் ஆட்சியா என்ற ஐயத்தை எழுப்புகிறது. தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும்போது இவ்வாறு உத்தரவிட ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது.
சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கை
பொறுப்பு ஆளுநரின் இந்த சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டிக்கிறோம். மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பல்கலைக்கழகங்களுக்குத் தமிழக ஆளுநர் வேந்தராக உள்ளார்.
இதுதான் வேந்தரின் அதிகாரங்கள்..
தமிழகப் பல்கலைக்கழகங்களுக்குப் பொதுவான சட்டம் இல்லை. ஒவ்வொரு பல்கலைக்கழகமும் அதற்கான சட்டத்தால் நிர்வகிக்கப்படுகிறது. அவற்றில் வேந்தரின் அதிகாரம் வரையறுக்கப்பட்டிருக்கிறது. "பட்டமளிப்பு விழாக்களுக்குத் தலைமை தாங்குவது; துணைவேந்தருடன் ஆலோசித்து ஒரு சில பொறுப்புகளுக்கு நியமனம் செய்வது; பல்கலைக்கழக நிர்வாக செயல்பாடு சரியாக இருக்கிறதா என்பதை அறிய அதன் ஆவணங்களைப் பார்வையிடுவது " ஆகியவையே ஒரு வேந்தரின் அதிகாரங்களாகப் பல்கலைக்கழக சட்டங்களில் குறிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆளுநர் பிறப்பித்திருக்கும் இந்த உத்தரவு இவை எவற்றிலும் உள்ளடங்கவில்லை.
கூட்டாட்சி தத்துவத்துக்கு உலை
தமிழக பொறுப்பு ஆளுநர் அவர்கள் தமிழக அரசின் அதிகாரங்களில் தலையிடுவது இந்திய கூட்டாட்சித் தத்துவத்துக்கே உலை வைப்பதாகும்.இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். மாநில அரசின் அதிகாரத்தைப் பறிக்கும் ஆளுநரின் இந்த நடவடிக்கையை ஜனநாயக சக்திகள் கண்டிக்க முன்வரவேண்டும் எனவும் வேண்டுகிறோம்.
இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.