மத்திய பாஜக அரசின் அடுத்த குறி திமுகதான்.. திருமாவளவன் எச்சரிக்கை
7 கோடி மக்கள் தொகை கொண்ட தமிழக விவசாய பிரதிநிதியை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்க மறுப்பது ஏன்? என்று திருமாவளவன் கேள்வி எழுப்பினார்.
சென்னை: தமிழகத்தில் உள்ள 7 கோடி மக்களின் விவசாய பிரதிநிதியை சந்திக்காமல் பிரதமர் நரேந்திர மோடி மறுப்பு தெரிவிப்பது ஏன் என்று விடுதலைச் சிறுத்தைகள் திருமாவளவன் கேள்வி எழுப்பினார்.
விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி வரும் 25-ஆம் தேதி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் அனைத்துக் கட்சிகளும் இணைந்து வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது. முழு அடைப்பு போராட்டம் விளக்கக் கூட்டம், இன்று இரவு சென்னை மயிலையில் உள்ள மாங்கொல்லையில் நடைபெற்றது.

திமுக நடத்திய இக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் மாநில தலைவர் திருநாவுக்கரசர், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் சார்பில், திருமாவளவன், திராவிடர் கழகம் சார்பில், கி.வீரமணி, மார்க்சிஸ்ட் சார்பில் சவுந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு பேசுகையில், அதிமுக ஆட்சி என்பது மோடியின் கையில் உள்ள கண்ணாடி பாத்திரம் போன்றதாகும். தமிழக மக்களின் நலன் காக்க திமுக செயல்தலைவர் ஸ்டாலினால் மட்டும் முடியும்.
ஹிந்தி திணிப்பை தமிழகத்தில் செலுத்த பாஜக முயற்சித்து வருகிறது. இதை எதிர்க்க வலுவுள்ள ஒரே கட்சி திமுகதான். திராவிட கட்சிகளை வேரறுக்க வேண்டும், மதவாதச் சக்திகள் ஆட்சி அமைக்க வேண்டும் என்று பாஜக கங்கணம் கட்டிக் கொண்டு போராடி வருகிறது.
நிலத்தடி நீராதாரம் குறைந்து கொண்டே வருவதால் இன்னும் சில காலங்களில் தமிழகமே பாலைவனம் ஆகும் நிலை ஏற்படுவதை தடுக்க வேண்டும். குடிநீர் பிரச்சினைக்கு வெறும் ரூ.52 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. மானம் காத்த தமிழக விவசாயிகள் தலைநகர் டெல்லியில் மானமிழந்துள்ளனர். காவிரி மேலாண்மை வாரியத்தை கொண்டு வராததற்கு மோடியே காரணம்.
தேர்தல் நேரத்தில் ஏழைகளின் குடிசைகளுக்கு செல்லு்ம பிரதமர் மோடியால் 7 கோடி மக்கள் தொகை கொண்ட தமிழகத்தின் விவசாய பிரதிநிதியை சந்திக்க முடியாதது ஏன். டெல்லி அரசின் திட்டங்களை தடுக்க வலுவுள்ள கட்சி என்பதால் திமுகவுக்கு மத்திய அரசு குறி வைத்து வருகிறது. ஜெயலலிதா மரணமடைந்துள்ளதால் அதிமுக பலவீனமாக உள்ளது. திமுகவையும் வீழ்த்திவிட்டால் தமிழகத்தில் காலூன்றலாம் என்பது பாஜக திட்டம். இந்த போராட்டத்தின் மூலம் மத்திய அரசுக்கு சம்மட்டி அடி கொடுக்க வேண்டும் என்றார் திருமாவளவன்.












Click it and Unblock the Notifications