இலங்கை மீது சர்வ தேச விசாரணை நடத்த வேண்டும்.. கால நீடிப்புக் கூடாது.. திருமாவளவன் கோரிக்கை
இலங்கை மீது சர்வ தேச குற்றவியல் நீதிமன்ற விசாரணை நடத்த வேண்டும் என்று திருமாவளவன் கோரியுள்ளார். சென்னை எழும்பூரில் இதுதொடர்பான ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று அவர் இவ்வாறு கூறினார்.
சென்னை: சர்வ தேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்கு இலங்கையை உட்படுத்த வேண்டும் என்று கோரி மே 17 இயக்கம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் தந்தைப் பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு. ராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இலங்கையின் தந்திரம்
இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டிய விசாரணையை இதுவரை தொடங்கவில்லை. மைத்ரி பால சிறிசேனா அரசு அதற்கான முயற்சியை செய்யவில்லை. இப்போது கால அவகாசம் முடிந்துவிட்ட நிலையில், 2019 வரையில் கால நீடிப்பு வேண்டும் என்றும் நாங்களே அந்த நீதி விசாரணையை நடத்தி முடிப்போம் என்று ஒரு வரைவு தீர்மானத்தை இலங்கை அரசு கொண்டு வந்துள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய நாடுகளின் துணையோடு நீடிப்பை பெறுவதற்கும் அது முயற்சிக்கிறது.

சர்வ தேச குற்றவியல் நீதிமன்றம்
இந்த கால நீடிப்பை வழங்குவது எந்த வகையிலும் நியாயமானதல்ல. ஆகவே, இந்த விசாரணையை ஐ.நா பொதுப் பேரவைக்கு கொண்டு செல்ல வேண்டும். அதனைத் தொடர்ந்து சர்வ தேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். அல்லது அதற்கான தீர்ப்பாயத்திடம் இதனை ஒப்படைக்க வேண்டும்.

கேட்பது இதுதான்..
நாங்கள் ஐ.நா. அமைப்பிற்கும் சர்வ தேச சமூகத்திற்கு விடுகின்ற வேண்டுகோள் இதுதான். இலங்கை அரசுக்கு கால நீடிப்பு தரக் கூடாது, உள்ளக விசாரணையை அனுமதிக்கக் கூடாது, ஐ.நா. பொதுப் பேரவைக்கு கொண்டு சென்று அதன் மூலம் சர்வ தேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்கு அல்லது சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்திற்கு இந்த விசாரணையை ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

தமிழீழம் எப்போது?
தமிழீழம் தொடர்பான பொது வாக்கெடுப்பை உலகம் முழுவதும் பரந்து வாழ்கின்ற தமிழர்களிடையே நடத்துவதற்கு ஐ.நா. பேரவை அனுமதிக்க வேண்டும். அதற்கான ஆணையிட வேண்டும் என்றும் கோருகிறோம்.

இந்திய செய்ய வேண்டியது?
இந்திய அரசு வழக்கம் போல இலங்கை அரசுக்கு துணை நிற்பதிலேயே தீவிரம் காட்டுகிறது. இந்திய அரசு உள்ளக விசாரணைக்கு எந்த வகையிலும் ஆதரவளிக்கக் கூடாது. கால நீடிப்பிற்கு ஆதரவளிக்கக் கூடாது. இதனை சர்வ தேச விசாரணைக்கு கொண்டு செல்ல இந்திய அரசு ஆவண செய்ய வேண்டும். தமிழக எம்பிக்கள் மத்திய அரசுக்கு இந்தக் கருத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என்று திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications