தமிழகத்தில் அதிமுகவை பலவீனப்படுத்தி பாஜகவின் பினாமி அரசை உருவாக்க சதி: திருமாவளவன் சந்தேகம்
சென்னை: தமிழகத்தில் அதிமுகவை பலவீனப்படுத்தி பாரதிய ஜனதா கட்சியின் பினாமி அரசாங்கத்தை சதித் திட்டம் தீட்டப்படுகிறதோ என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் சந்தேகம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியதாவது:
முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்த ராகுல்காந்தியின் சந்திப்பு பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது. சுப்பிரமணியசாமி ஜனாதிபதி ஆட்சியை தமிழகத்தில் அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததும், அதிமுக ஆட்சியை கலைக்க பாஜக முயற்சிக்கிறது என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

சதித்திட்டம்
அதிமுகவை பலவீனப்படுத்தவும், பாஜகவின் ஒரு பினாமி அரசை தமிழகத்தில் உருவாக்கவும் சதித்திட்டம் தீட்டுகிறதோ என்கிற சந்தேகத்தையும் உருவாக்கி உள்ளது. இரு வாரங்களுக்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வரை நேரிலே சந்திக்க சுப்பிரமணியசாமியோ, அல்லது பிரதமர் மோடியோ முயற்சிக்கவில்லை.

ஆதாயம் தேடும் பாஜக
ஆனால் முதல்வர் உடல்நிலையை பயன்படுத்தி இங்கு ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று பாஜக முயற்சிக்கிறது. முதல்வரின் உடல் நிலையை வைத்து அரசியல் ஆதாயம் தேட விரும்புவது பாஜகதான் என்பதை உணர முடிகிறது.

மனிதநேய சந்திப்பு
பாஜகவின் சதி முயற்சியை முறியடிக்கிற வகையில் ராகுல்காந்தியின் பயணம் அமைந்திருக்கிறது என்று விவாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் அவருடைய சந்திப்பு முற்றிலும் மனித நேயத்தின் அடிப்படையிலான சந்திப்பு என்றே நான் நம்புகின்றேன்.

ஆதரவு என்பது?
ராகுல்காந்தி செய்தியாளர்களின் சந்திப்பின் போது, முதல்வர் ஜெயலலிதாவுக்கு காங்கிரசின் ஆதரவையும், வாழ்த்துக்களையும் கூறி இருக்கிறார். வாழ்த்துக்கள் என்று மட்டும் கூறாமல் ஆதரவையும் தருகிறோம் என்று சொல்லி இருப்பதால் ஆட்சியை கலைக்க விடாமல் செய்யும் என்று அரசியல் ரீதியாகவே அவர் கூறியிருக்கிறார் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

கருணாநிதியை சந்திக்காத ராகுல்
தமிழகத்தில் திமுகவும் காங்கிரசும் கூட்டணி உள்ள நிலையில் ராகுல்காந்தியின் பதில் பல்வேறு யூகங்களுக்கு இடம் அளிக்கிறது. திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்காமல் உடனடியாக அவர் டெல்லிக்கு சென்றதும் இவ்வாறான சந்தேகங்களுக்கு வாய்ப்பு அளிக்கிறது. டெல்லியைப் பொறுத்தவரையில் கூட்டணி அரசியலை தாண்டி இப்படிப்பட்ட மனிதாபிமான சந்திப்புகள் அடிக்கடி நிகழ்வது உண்டு. தமிழ்நாட்டில் மட்டும்தான் எல்லாவற்றையுமே கூட்டணி அரசியலோடு இணைத்து பார்க்கிற ஒரு கலாச்சாரம் வளர்ந்துள்ளது.
இவ்வாறு திருமாவளவன் கூறினார்.












Click it and Unblock the Notifications