சிதம்பரத்தில் மீண்டும் களமிறங்கும் திருமாவளவன்.. 2019ல் கண் உறங்காத இரவுகள்.. பிளாஷ் பேக்
சிதம்பரம்: சபாநாயகராக வீற்றிருக்கும் தில்லையம்பல நடராஜர் ஆட்சி புரியும் சிதம்பரத்தில் மீண்டும் களமிறங்கப்போகிறார் திருமாவளவன். திமுக கூட்டணியில் கடும் இழுபறிக்குப் பிறகு சிதம்பரம், விழுப்புரம் தொகுதியில் விசிக போட்டியிட ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் வெற்றிக்காக நள்ளிரவைத் தாண்டியும் சமூக வலைதளங்களில் காத்திருந்து பதிவுகளை போட்டுக் கொண்டே இருந்தனர்.
சிதம்பரம் லோக்சபா தொகுதியில் தலித்துகள் கணிசமாக உள்ளனர். அதே நேரத்தில் வன்னியர்களும் தீர்மானிக்கும் சக்திகளாக உள்ளனர். இத்தொகுதியில் ஏற்கனவே வெற்றி பெற்று எம்.பி.யாக பணியாற்றியவர் தொல். திருமாவளவன். கடந்த லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பியாக டெல்லி சென்றார். இந்த முறையும் அதே சிதம்பரம், விழுப்புரம் தனித் தொகுதிகளில் விசிக போட்டியிடுகிறது.

2 தனித்தொகுதி, 1 பொதுத்தொகுதிகளை கேட்டு விடாப்பிடியாக நின்றார் திருமாவளவன். ஆனால் இறுதியில் வென்றது திமுக தலைமைதான். கூட்டணி தர்மத்திற்காக விட்டுக்கொடுத்து விட்டார் திருமாவளவன். அதே நேரத்தில் பானை சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்று உறுதியாக கூறியுள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது திமுக கூட்டணியில் பானை சின்னத்தில் போட்டியிட்டார் திருமாவளவன். வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் திருமாவளவன் முன்னிலையில் இருந்தார். ஆனால் ஒருகட்டத்தில் வாக்கு எண்ணிக்கை நிலவரத்தையே தேர்தல் அதிகாரிகள் வெளியிடாமல் இருந்தனர். இதனால் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது.
திருமாவளவன் தோற்றார் என அறிவிக்க சதி நடப்பதாக சந்தேகம் எழுந்தது. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் விவாதங்களை கிளப்பியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் நடந்தன. திருமாவளவனுக்கு ஆதரவாக பலரும் பதிவிட்டனர். திருமாவளவன் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே பலரது விருப்பமாக இருந்தது.
சமூக வலைத்தளங்களில் கண் உறங்காமல் பலரும் நூற்றுக்கணக்கான கருத்துக்களை பதிவு செய்தனர். நள்ளிரவைத் தாண்டித்தான் திருமாவளவன் வென்றதாக அறிவிக்கப்பட்டது. திருமாவளவன் என்ற ஒற்றை மனிததின் வெற்றிக்காக அத்தனை ஜனமும் கண் விழித்திருக்கிறது என்றெல்லாம் உணர்ச்சி பெருக்கில் நெகிழ்ச்சியாக பதிவிட்டனர். எத்தனையோ சதிகளைக் கடந்து வென்றதாக அப்போது கொடுத்த பேட்டியில் கூறினார் திருமாவளவன்.
5 ஆண்டு காலம் சிதம்பரம் தொகுதி எம்.பியாக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்திருக்கிறார் திருமாவளவன். சிதம்பரம் தொகுதியில் மீண்டும் வேட்பாளராக களமிறங்கப்போகிறார் திருமாவளவன். கடந்த காலங்களில் நடைபெற்ற சம்பவங்களில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பாடம் கற்றிருப்பார்கள். இந்த முறை அதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நடைபெற வாய்ப்பில்லை என்று நம்பலாம்.












Click it and Unblock the Notifications