"கூட்டணி அரசு".... ஜி. ராமகிருஷ்ணனுடன் தொல். திருமாவளவன் ஆலோசனை!
சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணனை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் இன்று திடீரென சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது தமிழகத்தில் 'கூட்டணி அரசு' அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
தமிழகத்தில் அரசியல் சந்திப்புகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் நடைபெற்று வருகின்றன. தமிழக பிரச்சனைகளுக்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அதிரடியாக நேரில் சந்தித்தார். பின்னர் ஒரு அனைத்துக் கட்சிக் குழுவை டெல்லிக்கும் அவர் அழைத்துச் சென்றார்.

இதனைத் தொடர்ந்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தம்பி மு.க. இளவரசு வீட்டு திருமணத்துக்கு அழைப்பதற்காக அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் நேரில் சந்தித்தார். இதே பாணியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியும், தமிழக பிரச்சனைகளுக்காக ஒரு கூட்டியக்கம் அமைக்க அனைத்து கட்சி தலைவர்களையும் சந்தித்தார்.
இந்தப் பட்டியலில் தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனும் இணைந்துள்ளார். தமிழகத்தில் "கூட்டணி" அரசு அமைப்போம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்திக்கப் போவதாக திருமாவளவன் அறிவித்திருந்தார்.

இதன் முதல் கட்டமாக சென்னையில் இன்று மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணனை திருமாவளவன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது தமிழகத்தில் கூட்டணி அரசு அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதேபோல் பல்வேறு கட்சித் தலைவர்களையும் திருமாவளவன் சந்திக்க உள்ளார்.












Click it and Unblock the Notifications