ஜாதி சார்பற்ற அரசியல் நடத்துவோம் என்ற சசிகலா அறிவிப்புக்கு வரவேற்பு: திருமாவளவன்
பெண்ணுரிமைக்கான இயக்கம் விடுதலை சிறுத்தைகள் என்பதால் அதிமுகவின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள, சசிகலாவுக்கு வாழ்த்து தெரிவித்தேன் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
சென்னை: அதிமுக பொதுச்செயலராக பொறுப்பேற்ற சசிகலாவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
போயஸ் கார்டனுக்கு சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் சசிகலாவை நேரில் சந்தித்தார். அப்போது பொதுச்செயலராக பொறுப்பேற்றதற்கு சசிகலாவுக்கு வாழ்த்துகளை திருமாவளவன் தெரிவித்தார்.
இந்த சந்திப்புக்கு பிறகு நிருபர்களிடம் திருமாவளவன் கூறியதாவது: அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன். சசிகலாவுடனான சந்திப்பை தேர்தலுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டாம். ஜெயலலிதாவிற்கு பிறகு துணிந்து பொறுப்பை ஏற்றுக் கொண்டதை வரவேற்கின்றோம். அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்றதை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது.
பெண்ணுரிமைக்கான இயக்கம் விடுதலை சிறுத்தைகள் என்பதால் அதிமுகவின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள, சசிகலாவுக்கு வாழ்த்து தெரிவித்தேன். தமிழகத்தில் ஜாதி சார்பற்ற அரசியலை நடத்துவோம் என சசிகலா உறுதி அளித்ததை வரவேற்கிறோம். இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.
அதிமுகவின் பொதுச் செயலாளரும், முதல்வரும் ஒரே ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதால் அக்கட்சி மீது ஜாதி முத்திரை விழுந்துள்ளது. இதை நீக்க விடுதலை சிறுத்தைகள் போன்ற தலித் ஆதரவு கட்சியுடன் இணைந்து நடைபோடுவது நல்லது என்பது சசிகலா திட்டம் என கூறப்படுகிறது.