நிதானமாக நிற்கவே முடியாத விஜயகாந்த் முதல்வர் ஆனால் என்னாகும்? வைரலான திருமாவின் பழைய பேச்சு
சென்னை: மேடையில் நிதானமாக நிற்க முடியாதவர்.. சொந்த கட்சி வேட்பாளரை சாத்துகிற முன்கோப விஜயகாந்த் தமிழ்நாட்டின் முதலமைச்சரானால் என்னவாகும்? என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் முன்னர் பேசிய வீடியோ ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவிவருகிறது.
மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள் இணைந்து உருவாக்கிய மக்கள் நலக் கூட்டணி தற்போது தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொண்டுள்ளது. அத்துடன் தேமுதிக+ மக்கள் நலக் கூட்டணி இனி 'கேப்டன் விஜயகாந்த் அணி" என அழைக்கப்படும் எனவும் அதன் ஒருங்கிணைப்பாளர் வைகோ கூறி வருகிறார்.
இந்த அறிவிப்பு வெளியானதும்தாம் போதும்... மநகூ; கேநகூ என ஏகப்பட்ட விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் 'தெறி'க்கவிடப்பட்டன. இதன் ஒருபகுதியாக கடந்த தேர்தலில் விஜயகாந்த்தை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விளாசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன.
அந்த வீடியோவில் திருமாவளவன் பேசியிருப்பதாவது:
விஜயகாந்துக்கு கருப்பு எம்.ஜி.ஆர். என நினைப்பு.. அடுத்த முதலமைச்சர் என... அந்த அம்மாவுக்கு (ஜெயலலிதாவுக்கு) வெள்ளை எம்.ஜி.ஆரையே பிடிக்காது. அப்புறம் எங்க இந்த கருப்பு எம்.ஜி.ஆரை பிடிக்கும்?
விஜயகாந்த்தால் நிதானமாகவே மேடைகளில் நிற்க முடியாது. சொந்த கட்சி வேட்பாளரை போட்டு சாத்து சாத்துன்னு சாத்துறார்... அந்த அளவுக்கு முன்கோபம்..
இவரு தமிழ்நாட்டோட முதலமைச்சரானா என்னாகும் என யோசிச்சு பாருங்கள்...
இவ்வாறு அதில் திருமாவளவன் பேசியிருக்கிறார்.













Click it and Unblock the Notifications