ராம்குமார் மரணத்தில் அரசு யாரையோ காப்பாற்றுகிறது... திருமாவளவன் குற்றச்சாட்டு
சென்னை: ராம்குமார் மரணத்தில் தமிழக அரசு யாரையோ காப்பாற்றுகிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
புழல் சிறையில் இருந்த ராம்குமார் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி அவரது உடல் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. ராம்குமார் கைது செய்ததில் இருந்து சுவாதி கொலை குறித்தும் ராம்குமார் கைது குறித்தும் தொடர்ந்து குரல் எழுப்பி வந்தார் திருமாவளவன். தற்போது ராம்குமார் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பி சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் கோரி வருகிறார்.

இந்நிலையில், ராம்குமாரின் பிரேத பரிசோதனையின் போது தங்களது மருத்துவர் ஒருவர் இருக்க வேண்டும் என்று ராம்குமாரின் தந்தை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கு உறுதி துணையாய் திருமாவளவன் இருந்து செயல்பட்டு வருகிறார். ராம்குமாரின் பிரேத பரிசோதனை 2வது முறையாக தள்ளி வைக்கப்பட்டதற்கு பின்னர், சென்னை உயர்நீதிமன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்து திருமாவளவன் பேசியதாவது:
ராம்குமார் தந்தை செய்திருந்த மனு மீதான விசாரணையில் இரண்டு நீதிபதிகளுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால் ராம்குமாரின் பிரேத பரிசோதனை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ராமச்சந்திரா மருத்துவமனை மருத்துவர் சம்பத், ராம்குமாரின் பிரேத பரிசோதனையின் போது இருக்க வேண்டும் என்ற எங்களது வாதத்திற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எங்களுக்கு அரசு மருத்துவர்கள் இருப்பதில் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. அதே நேரத்தில் அரசு மருத்துவர்கள் அரசு சார்ந்துதான் செயல்படுவார்கள் என்பதால் தனியார் மருத்துவர் ஒருவரும் உடன் இருக்க வேண்டும் என்று சொல்கிறோம். ஆனால் இதனை ஏற்க அரசு தரப்பு வழக்கறிஞர் மறுத்துவிட்டார்.
இந்த வழக்கல் தமிழக அரசின் வாதம் என்னை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சுவாதி கொலையில் விசாரிப்பதற்காக அழைத்து செல்லப்பட்ட ராம்குமார் சந்தேகத்திற்குரிய வகையில் மரணம் அடைந்திருக்கிறார். பிரேத பரிசோதனை முறையாகவும் நியாயமாகவும் நடக்க வேண்டும் என்ற எங்களது கோரிக்கையை தமிழக அரசு ஏற்க மறுப்பதை பார்த்தால் இந்த வழக்கில் தொடர்புடைய யாரையோ அரசு காப்பாற்ற முயற்சி செய்கிறது. எதையோ மூடி மறைக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளது. ஆனால் ராம்குமாரின் மரணம் திட்டமிட்ட கொலை என்பதை வெளி கொண்டு வரும் வரை சட்ட ரீதியான எங்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications