திமுகவுடன் தொடருமா கூட்டணி? 61 மாவட்ட காங். தலைவர்களுடன் திருநாவுக்கரசர் ஆலோசனை #congress
சென்னை: திமுக கூட்டணியில் இருந்து விலகக் கூடும் என கூறப்பட்டு வரும் நிலையில் 61 மாவட்ட தலைவர்களுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் இன்று ஆலோசனை நடத்தினார்.
திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸை வெளியேற்றிவிட்டு தமிழ் மாநில காங்கிரஸை சேர்க்க விரும்பியது ஸ்டாலின் தரப்பு. ஆனால் கனிமொழி தரப்போ காங்கிரஸ் கூட்டணியில் நீடிக்க வேண்டும் என அழுத்தம் கொடுத்தது. இதற்கு திமுக தலைவர்கருணாநிதியும் ஆதரவு தெரிவித்திருந்தார்.
அதிருப்தியில் காங்.
இதனால் திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடித்து வருகிறது. ஆனாலும் உள்ளாட்சி தேர்தலில் மிகவும் சொற்ப இடங்களைத்தான் காங்கிரஸுக்கு திமுக ஒதுக்கியது. இதில் காங்கிரஸ் கடும் அதிருப்தி அடைந்தது.
ராகுல் வருகை
இதனிடையே முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரிக்க ராகுல் காந்தி சென்னைக்கு வருகை தந்தது திமுக- காங்கிரஸ் உறவில் உச்சகட்ட விரிசலை ஏற்படுத்தியது. மேலும் ஜெயலலிதா உடநலம் தொடர்பான திமுகவின் கோரிக்கைகள் அனைத்துக்குமே திருநாவுக்கரசர் பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.
ஆலோசனை
இதனால் திமுக கூட்டணியில் இருந்து விலகி அதிமுகவுடன் காங்கிரஸ் கை கோர்க்கும் எனக் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னையில் இன்று 61 மாவட்ட தலைவர்களுடன் திருநாவுக்கரசர் ஆலோசனை நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டணி...
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுகவுடனான கூட்டணி, உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.