அதிமுக அரசை மத்திய அரசு நிலைகுலையச் செய்தால் காங். கண்டிக்கும்- திருநாவுக்கரசர்
சென்னை: அதிமுக அரசை மத்திய அரசு நிலைகுலையச் செய்தால் காங்கிரஸ் கட்சி கண்டிக்கும் என்று தமிழக காங். கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் காலத்தின் குரல் நிகழ்ச்சியில் நெறியாளர் குணசேகரனுக்கு அளித்த பேட்டியில் திருநாவுக்கரசர் கூறியதாவது:
ஜெயலலிதா உடல்நிலை குறித்த விவகாரத்தில் திமுக- காங். ஒரே கருத்தை தெரிவிக்க வேண்டியது இல்லை. இடைக்கால முதல்வர் கோரிக்கை தொடர்பாக திமுகவுக்கும் காங்.க்கும் முரண்பாடு இல்லை- கருத்து வேறுபாடுதான் ஏற்பட்டது.
இடைக்கால முதல்வர் விவகாரத்தில் என்னுடைய கருத்தை திமுக தவறு என கூறவில்லை. என்னைப் பொறுத்தவரை ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்களை மருத்துவர்களாக மட்டுமே பார்க்கிறேன்.
அதே நேரத்தில் மாநில அரசுகளை கலைப்பது; அதிமுக அரசை மத்திய அரசு நிலைகுலையச் செய்வது போன்றவற்றை காங்கிரஸ் வேடிக்கை பார்க்காது. இத்தகைய ஜனநாயக விரோத நடவடிக்கைகளை காங்கிரஸ் கண்டிக்கும்.
நான் முன்னர் அதிமுகவில் முக்கிய பொறுப்பில் இருந்தாலும் தற்போது தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்....அதிமுகவுக்கு நான் ஆலோசனை கூற வேண்டிய தேவை எதுவும் இல்லை.
இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.