பிச்சை போட வரும் கட்சிகள்.. தூக்கிப் போடுங்க மக்களே..உங்க பிரச்சினையை நீங்களே சரி செய்ங்க
சென்னை: சென்னை மழை பாதிப்பை அப்படியே தேர்தலுக்கு தங்களுக்கு சாதகமாக மாற்றி கொள்ள ஆரம்பித்துள்ளன கட்சிகள். அப்பட்டமாகவே இதைப் பார்க்க முடியும். வெள்ள நிவாரணம் என்பதை சாக்காக வைத்து மக்களுக்கு, காசு பணம் கொடுக்கும் வேலையிலும் இறங்கியுள்ளனர்.
ஆனால் உண்மையில் மக்கள் இந்த நேரத்தில்தான் மிகவும் சுதாரிப்பாக இருக்க வேண்டும். காரணம், அவர்களின் வாழ்க்கையை ஒரு மழை வந்து புரட்டிப் போட்டு விட்டது. அதை சரி செய்வதில்தான் அவர்கள் இப்போது அக்கறை காட்ட வேண்டுமே தவிர அரசியல்வாதிகளின் அரசியல் இசைக்கு ஏற்ப தாளம் போட ஆரம்பித்தால் துயரம் அவர்களுக்குத் தொடர்கதையாகவே இருக்கும்.
உண்மையில் சென்னை மக்கள் இப்போது சீரியஸாக சிந்திக்க வேண்டிய நேரம் வந்துள்ளது. சென்னை மக்கள் மட்டுமல்ல மழையால் பாதிப்புக்குள்ளான அத்தனை பேருமே சிந்திக்க வேண்டிய நேரம் இது.

ஏன் இவ்வளவு கஷ்டம்?
எல்லா ஊரிலும்தான் மழை பெய்கிறது. ஆனால் சென்னையில் எப்போது பெருமழை பெய்தாலும் பெரும் கஷ்டமும் கூடவே வந்து விடுகிறது. ஏன் இப்படி? காரணங்கள் பல உள்ளன.

மழை நீர்க் கால்வாய்களின் பரிதாபம்
சென்னை நகரில் பெரும்பாலான பகுதிகளில் மழை நீர்க் கால்வாய் வசதி இருந்தாலும் அவை சரிவர பராமரிக்கப்படுவதில்லை. மக்கள் போடும் குப்பைகள் மற்றும் இயற்கையாகவே சேரும் குப்பைகளை அகற்றும் பணியில் முறைப்படி யாரும் ஈடுபடுவதில்லை. மாநகராட்சி இதுதொடர்பாக எந்த வேலையும் செய்வதில்லை என்பது பெரும் குற்றச்சாட்டாக உள்ளது. மழை பெய்யும் நேரத்தில்தான் பொக்லைனுடன் வருகிறார்களே தவிர மற்ற நேரங்களில் எட்டிக் கூட பார்ப்பதில்லை.

ஏரிகள் ஆக்கிரமிப்பு
சென்னை மாநகராட்சி எல்லைக்குள் முன்பு வேளச்சேரி ஏரியும், சேத்துப்பட்டு ஏரியும் மட்டுமே இருந்தன. இதில் சேத்துப்பட்டு சுருங்கி சுணங்கிப் போய் ரொம்ப காலமாகி விட்டது. வேளச்சேரி ஏரி மட்டுமே உயிர்ப்புடன் இருந்தது. ஆனால் வேளச்சேரி ஏரிப் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகம். ஆனால் ஆக்கிரமித்தவர்கள் பெரும்பாலும் ஏழை எளியவர்கள் என்பதால் இதுவரை நடவடிக்கை இல்லை.

தரமணி ஆக்கிரமிப்பு
தரமணி பகுதியில், பக்கிங்காம் கால்வாயையொட்டி ஒரு மிகப் பெரிய ஆக்கிரமிப்பு உள்ளது. இதுவும் இதுவரை அகற்றப்படவில்லை. இங்கு பெரும்பாலானவர்கள் நிரந்தர வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர். மின்சாரம் உள்ளது, ரேஷன் கார்டு உள்ளது, வாக்காளர் அடையாள அட்டை உள்ளது.

அரசியல் ஆக்கிரமிப்புகள்
இப்படிப்பட்ட பெரும்பாலான ஆக்கிரமிப்புகளுக்கு தமிழகத்தின் இரு பெரும் அரசியல் கட்சிகளில் ஏதாவது ஒன்றின் ஆசி நிச்சயம் இருக்கும்.இதனால் இந்த ஆக்கிரமிப்புகள் ஒருபோதும் நீக்கப்பட மாட்டாது என்பதால் துயரங்களும் தொடர் கதையாக உள்ளன.

வேளச்சேரி - மடிப்பாக்கம்
மடிப்பாக்கம் எப்போதுமே மழைக்காலத்தில் மிதக்கும். வேளச்சேரி நிலைமை சொல்ல வேண்டியதில்லை. இரண்டுமே இப்படிப்பட்ட நிலையை தொடர்ந்து சந்தித்து வர ஏரிகள், ஏரிக் கால்வாய்கள் ஆக்கிரமிப்புதான் மிக முக்கியமானது. மேலும் மிகவும் தாழ்வான பகுதிகளில் வீடுகளைக் கட்டியதும் ஒரு முக்கியக் காரணம்.

உயர்ந்த சாலைகள்
மேலும் சாலைகளைப் போடும்போது அப்படியே கொத்தி விட்டு அதே உயரத்தில் போடுவதில்லை நமது ஆட்கள். மாறாக, அந்த சாலை மேலேயே உயர்த்தி, உயரமாக போட்டு விடுகின்றனர். இதனால் சாலைகள் உயரமாகி விடுகின்றன. ஊர் பள்ளத்திற்குப் போய் விடுகிறது.

அரசியல்வாதிகளுக்கு என்ன அக்கறை?
மழைக்காலத்தில் வரும் துயரம் என்பது இன்று நேற்று சென்னை மக்கள் சந்திக்கவில்லை. காலம் காலமாக இருந்து வரும் பிரச்சினை. எம்.ஜி.ஆர். காலத்திலும் இருந்தது. கருணாநிதி காலத்திலும் இருந்தது. ஜெயலலிதா காலத்திலும் இருந்தது. இனி ஸ்டாலின் வந்தாலும் கூட இது நிச்சயம் இருக்கும். காரணம், உண்மையான அக்கறையுடன் எந்த அரசியல்வாதியும் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முன்வராதது, முயலாததுதான்.

பாரபட்சமில்லாமல் அகற்ற வேண்டும்
ஏரி, குளம், கண்மாய் ஆக்கிரமிப்பு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் மிகக் கடுமையான உத்தரவுகளை ஏற்கனவே பிறப்பித்துள்ளது. ஆனால் அதை யாருமே கண்டு கொள்வதே இல்லை. ஆக்கிரமிப்பாளர்களும் கவலைப்படுவதில்லை. அரசும் உறுதிபட நடவடிக்கை எடுப்பதில்லை. இது மாற வேண்டும். பாரபட்சமின்றி ஆக்கிரமிப்பாளர்கள் அப்புறப்படுத்தப்பட வேண்டும்.

ஏரிகள், குளங்கள், கால்வாய்கள் பாதுகாப்பு
அந்தக் காலத்தில் மிகுந்த மதி நுட்பத்துடன் வெட்டப்பட்டவைதான் இந்த ஏரிகளும், குளங்களும், கண்மாய்களும். பொறியியல் வளர்ச்சி இல்லாக அக்காலத்தில் அக்காலத்து மக்கள் செய்த மிகப் பெரிய பணி இது. ஆனால் நமது சுயநலத்திற்காக இன்று அவற்றை நாம் அழித்து விட்டோம், அழித்து வருகிறோம். ஏரிகளையும்,ஏரியில் நிரம்பும் நீரை அடுத்த ஏரிக்குக் கடத்துவதற்காக வெட்டி விடப்பட்ட கால்வாய்களையும் இன்று பாதுகாக்க மக்களும் சரி, அரசும் சரி அனைவருமே சேர்ந்து தவறி விட்டோம்.

மக்களே முன்வந்து இறங்க வேண்டியதுதான்
இன்று மழை நீர், வெள்ளத்தை முன்வைத்து அரசியல்வாதிகள், தலைவர்கள், தலைவிகள் மக்களிடம் ஓடி வருகிறார்கள். கூடவே கேமராமேன்களுடன் வருகிறார்கள். ஏதோ கொடுக்கிறார்கள்.. ஆறுதல் சொல்கிறார்கள்.. புகைப்படம் எடுத்துக் கொண்டு கிளம்பிச் சென்று விடுகிறார்கள். உண்மையில் பிரச்சினை அங்கேயேதான் தொடர்ந்து இருந்து வருகிறது. அதை சரி செய்ய மக்களே முயல வேண்டும்.

ஆக்கிரமிப்பைத் தவிர்ப்போம்
சென்னை நகருக்குள் இருப்பவர்களாக இருந்தாலும் சரி, வெளியில் இருப்பவர்களாக இருந்தாலும் சரி ஆக்கிரமிப்புகளை தவிர்க்க முன்வர வேண்டும். இது சமுதாயக் கடமை. சாக்கைடகள், மழை நீர்க் கால்வாய் போன்றவற்றில் அடைப்பு ஏற்படாத வகையில் கண்டதையும் போடுவதை நாம் தவிர்க்க வேண்டும். குப்பைகளை குப்பைத் தொட்டியில் போடும் பழக்கத்தை பழக வேண்டும்.

கால்வாய்களைக் காப்போம்
ஏரிகளுக்கு அருகே கட்டுமானம் செய்வது, கால்வாய்களை ஆக்கிரமிப்பது உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும். அந்தந்தப் பகுதி நலச் சங்கத்தினர் மூலம் மக்களே இணைந்து அவ்வப்போது கால்வாய்களை சரி செய்யும் பணியை தொடர்ந்து செய்து வந்தால் நிச்சயம் மழைக்காலத்தின்போது ஏற்படும் பாதிப்புகளில் ஓரளவு குறைக்க முடியும்.

நம் தவறைக் குறைப்போம்
முதலில் மக்கள் தங்கள் பக்கம் உள்ள குறைகளைத் திருத்திக் கொள்ள முன்வர வேண்டும். காரணம், இன்று சென்னையில் சொந்த வீடு கட்டிய அத்தனை பேருமே ஏதோ பாவிகள் என்பது போல பேஸ்புக்கில் பலர் கிண்டலடித்து வருகின்றனர். அவர்களால்தான் ஊரே வெள்ளக்காடாகி விட்டது போல கிண்டலடிக்கிறார்கள். இந்த அவப் பெயரை சென்னை மக்கள் துடைக்க வேண்டும். சென்னையின் பெயரை நிலைநிறுத்த வேண்டும்.

யாரும் செய்ய மாட்டார்கள்
அரசியல்வாதிகள் செய்வார்கள், அவர் செய்வார் இவர் செய்வார், அந்த ஆட்சி செய்யும் இந்த ஆட்சி கண்டிப்பாக செய்யும் என்று நாம் காலம் காலமாக சொல்லிக் கொண்டேதான் இருக்கிறோம். ஆனால் யாருமே செய்ததாக சரித்திரம் இல்லை. மக்களே களம் இறங்கி அவர்களுக்கான இடத்தை அவர்களே சரி செய்தால்தான், தவறு செய்யும் அரசியல்வாதிகளுக்கும் அது பொட்டில் அடித்தது போல இருக்கும்.












Click it and Unblock the Notifications