"58,984".. அதிமுகவை பாஜக அடை காத்துக் கொண்டிருப்பது இதற்குத்தான்!
சென்னை: அதிமுகவை பாஜக மறைமுகமாக கட்டுக்குள் வைத்திருப்பதாக பேச்சுக்கள் பலமாக இருப்பதற்கு காரணம் இல்லாமல் இல்லை. குடியரசுத் தலைவர் தேர்தலை மனதில் கொண்டே அதிமுகவை, பாஜக அடை காத்துக் கொண்டிருப்பது சில புள்ளிவிவரங்களைப் பார்த்தால் புரிந்து கொள்ள முடியும்.
குடியரசுத் தலைவர் தேர்தல் வரைதான் இந்த இரும்புப் பிடி இருக்கும் என்றும் தைரியமாக நம்பலாம். அதன் பிறகு அதிமுக மீதான பாஜகவின் பிடி எந்த அளவுக்கு இருக்கும் என்பதை இப்போதே கணிக்க முடியாது.
குடியரசுத் தலைவர் ஜூலை மாதம் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பாளர் குறித்து பல்வேறு விதமான பேச்சுக்கள் அடிபட்டு கொண்டுள்ளன. அத்வானி பெயர் அடிபட்டது. கடைசியில் அவர் சுப்ரீம் கோர்ட் புண்ணியத்தால் அடிபட்டுப் போனார். இந்த நிலையில் மறுபக்கம் தனது வாக்குகளை ஸ்திரப்படுத்தி வருகிறது பாஜக.

5.32 லட்சம் இருக்கு.. 5.49 லட்சம் வாக்குகள் தேவை
குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒரு வேட்பாளர் வெற்றி பெற மொத்தம் 5 லட்சத்து 49 ஆயிரத்து 442 வாக்குகள் தேவை. தற்போது பாஜகவிடம் மொத்தமாக 5,31,954 லட்சம் வாக்குகள் உள்ளன (கூட்டணிக் கட்சிகளையும் சேர்த்து). எனவே கூடுதலாக தேவைப்படும் 17,488 வாக்குகளுக்காக அது இரு கட்சிகளை குறி வைத்துள்ளது.

அதிமுக வாக்கு 58,984
அதிமுகவிடம் உள்ள 134 எம்.எல்.ஏக்கள் மூலம் வரும் வாக்குகள் 23,584 ஆகும். அதேபோல அதிமுக வசம் உள்ள 50 எம்.பிக்கள் (லோக்சபா + ராஜ்யசபா) மூலம் கிடைக்கும் வாக்குகளின் மதிப்பு 35,400 ஆகும். ஆக மொத்தம் 58,984 வாக்குகள் அதிமுகவிடம் உள்ளன. இதனால்தான் அதிமுகவின் இரு பிரிவுகளையும் மாறி மாறி தனது பிடியில் வைத்துக் கொள்ளத் துடிக்கிறது பாஜக.

அதிமுக இணைந்தால்
அதிமுக மற்றும் பிஜூ ஜனதாதளத்தின் வாக்குகள் அப்படியே பாஜகவுக்கு விழுந்தால் அதன் வாக்குகளின் மதிப்பு 6 லட்சத்து 28 ஆயிரத்து 195 ஆக உயர்ந்து விடும். இதுதான் பாஜக போடும் கணக்கு. இதனால்தான் அதிமுகவை வலுக்கட்டாயமாகவும், பிஜூ ஜனதாதளத்தை நைச்சியமாகவும் தனக்கு ஆதரவாக திருப்பிக் கொண்டிருக்கிறது பாஜக.

வழக்குகள், ரெய்டுகள், மிரட்டல்கள்
சசிகலா தரப்பு அதிமுகவை தனது பக்கம் வைத்துக் கொள்ளவே வழக்குகள், ஐடி ரெய்டுகள் என மிரட்டல்கள் விடுக்கப்படுவதாக ஏற்கனவே பேச்சு உள்ளது. அது இந்த வாக்குமதிப்பை மனதில் வைத்துத்தான் என்று ஊகிக்கலாம். அதேசமயம், ஓ.பன்னீர் செல்வம் தரப்பையும் தனக்கு ஆதரவாகவே வைத்துள்ளது பாஜக. எனவே அதிமுகவின் வாக்குகள் மொத்தமாகவே பாஜகவுக்குப் போகும் என்ற நம்பிக்கையில் அக்கட்சியினர் உள்ளனர். இதனால்தான் தற்போது பாஜகவுக்கு, அதிமுக மிக மிக முக்கியமாக உள்ளது.

4896-776-4120
குடியரசுத் தலைவர் தேர்தலில் மொத்தம் 4896 மக்கள் பிரதிநிதிகள் வாக்களிக்குத் தகுதி படைத்தவர்கள் ஆவர். இதில் 776 பேர் லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பிக்கள். 4120 பேர் சட்டசபை உறுப்பினர்கள். சச்சின் டெண்டுல்கர் போன்ற நியமன உறுப்பினர்களுக்கு வாக்குரிமை கிடையாது.












Click it and Unblock the Notifications