உலகை உலுக்கிய விமான விபத்துகள்.. ஒரு டைம்லைன்
சென்னை: சென்னையில் இருந்து அந்தமான் கிளம்பிய இந்திய விமானப்படை போர் விமானம் 29 பேருடன் மாயமாகியுள்ளது.
விமான விபத்துகள் என்பது கடந்த 10 வருடங்களில் மிக அதிகமாக நடைபெற ஆரம்பித்துள்ளன. எனவே, மாயமான விமானம் பத்திரமாக திரும்பி வர வேண்டும் என்பதே அனைவரது வேண்டுதலாகவும் உள்ளது.
கடந்த சில வருடங்களில் உலகையே உலுக்கிய சில முக்கிய விமான விபத்துகள் குறித்த ஒரு சுருக்கமான பார்வை இதோ:

பெரிய விபத்து
2005 ஆகஸ்ட் 14: கிரீஸ் நாட்டில், போயிங் 737-300 ரக விமானம் விபத்தில் 121 பேர் பலியாகினர். 2005 ஆகஸ்ட் 16: வெஸ்ட் கரீபியன் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்று மேற்கு வெனிசுவேலாவில் விபத்தில் சிக்கியது. இதில் 160 பேர் பலியாயினர்.

நைஜீரியாவில் அடுத்தடுத்து
அக்டோபர் 22: நைஜீரியாவில் சர்வதேச விமான நிலையத்தில், விமானம் புறப்படும்போது ஏற்பட்ட விபத்தில் 117 பேர் பலியாகினர். டிசம்பர் 10: நைஜீரியாவில் சோசோலிசோ ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளாகி 108 பேர் உயிரிழந்தனர்.

ரஷ்ய விமானம்
2006 மே 3: கருங்கடலில், அர்மாவியா ஏர்பஸ் ஏ320 ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 113 பேர் உயிரிழந்தனர்.
ஜூலை 9: ரஷ்யாவில் எஸ்7 ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்ததில் 128 பேர் உயிரிழந்தனர்.

உக்ரைனில் விபத்து
ஆகஸ்ட் 22: துபோலெவ் நிறுவனத்தின் பயணிகள் விமானம் உக்ரைனின் டொனெட்ஸ்க் நகரில் விபத்துக்குள்ளானதில் 170 பேர் பலியாயினர். 2007, மே 5: கென்ய ஏர்லைன்ஸ் விமானம், கேமரூன் நாட்டில் விபத்துக்குள்ளானதில் 114 பேர் உயிரிழந்தனர்.

பிரேசில்
ஜூலை 17: பிரேசில் நாட்டில், டி.ஏ.எம். ஏர்லைன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கியதில் 199 பேர் உயிரிழந்தனர். 2008, ஆகஸ்ட் 20: ஸ்பெயின் நாட்டின் பரஜஸ் விமான நிலையத்தில், "டேக்ஆப்' ஆகும் போது ஏற்பட்ட விபத்தில் 154 பேர் உயிரிழந்தனர்.

ஏர் பிரான்ஸ்
2009, ஜூன் 1: பிரேசிலில் இருந்து பிரான்ஸ் சென்ற ஏர்பிரான்ஸ் விமானம் அட்லாண்டிக் கடலில் விழுந்ததில் 228 பேர் உயிரிழந்தனர். ஜூலை 15: ஈரானில் காஸ்பியன் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் 153 பேர் உயிரிழந்தனர்.

மங்களூரில் மோசமான விபத்து
2010 மே 12: லிபியா நாட்டு, தலைநகர் திரிபோலியில் ஏர்பஸ் ஏ330யில் விபத்து ஏற்பட்டு 103 பேர் உயிரிழந்தனர்.
மே 22: ஏர் இந்தியாவின் போயிங் 737-800 ரக விமானம், மங்களூர் விமான நிலைய ஓடு பாதையை கடந்து ஓடி விபத்துக்குள்ளானதில் 158 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில்
ஜூலை 28: மோசமான வானிலை காரணமாக, பாகிஸ்தானின் ஏர்புளூ விமானம், இஸ்லாமாபாத்துக்கு வடகிழக்கு மலைப்பகுதியில் விபத்துக்குள்ளாகி, 152 பேர் உயிரிழந்தனர்.

மாயமான மலேசிய விமானம்
2014 மார்ச் 8: 239 பயணிகளுடன் கோலாலம்பூரிலிருந்து-பீஜிங் நோக்கி சென்ற மலேசிய விமானம் என்ன ஆனதென்றே தெரியவில்லை. அதில் இருந்தவர்கள் நிலைமை புரியவில்லை.

ரஷ்ய எல்லையில் வீழ்த்தப்பட்டது
ஜூலை 17: ஹாந்து தலைநகர், ஆம்ஸ்டர்டாமிலிருந்து கோலாலம்பூருக்கு சென்ற விமானம், ரஷ்ய எல்லையருகே சுட்டு வீழ்த்தப்பட்டது. இதனால் விமானத்திலிருந்த 298 பேர் உயிரிழந்தனர்.

ஏர் ஏசியா
ஜூலை 24: அல்ஜீரியாவிலிருந்து கிளம்பிய விமானம் மாலி பாலைவலைத்தின் வடக்கு பகுதியில் விபத்துக்குள்ளானதில் 118 பேர் உயிரிழந்தனர். டிசம்பர் 28: இந்தோனேசியாவின் சுரபயா விமானநிலையத்திலிருந்து சிங்கப்பூருக்கு கிளம்பிய ஏர்ஏசியா விமானம் விபத்துக்குள்ளாகி 162 பேர் உயிரிழந்தனர்.

மீண்டும் ஏர் ஏசியா
2015 பிப்ரவரி 5: தைவானில் "டிரான்ஸ் ஆசியா' நிறுவனத்தை சேர்ந்த பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 31 பேர் உயிரிழந்தனர். பிப்ரவரி 18: இந்தோனேசியாவின் ஏர் ஆசியா விமானம் நடு வானில் சென்ற போது தொடர்பு துண்டிக்கப்பட்டு விபத்துக்குள்ளானதில் 162 பேர் உயிரிழந்தனர்.

ரஷ்ய விமானம்
மார்ச் 24: ஸ்பெயினில் இருந்து ஜெர்மனிக்கு சென்ற பயணிகள் விமானம் பிரான்சின் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் விபத்துக்குள்ளானதில் 150 பேர் உயிரிழந்தனர். அக்டோபர் 31: ரஷ்ய விமானம், எகிப்தில் விபத்துக்குள்ளானதில் 224 பேர் உயிரிழந்தனர்.

டோர்னியர்
மேலும், கடந்த ஆண்டு ஜூன் 8ம் தேதி கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான டோர்னியர் ரக சிறிய விமானம், சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு புறப்பட்டு சென்றது. அப்போது அந்த விமானத்தில், சுபாஷ் சுரேஷ், எம்.கே.டோனி ஆகிய விமானிகளும், துணை கமாண்டர் வித்யாசாகரும் இருந்தனர்.

மூன்று வீரர்கள் சாவு
அந்த விமானம் இரவு சுமார் 9.30 மணியளவில் திடீரென மாயமானது. அதனைத் தொடர்ந்து மாயமான அந்த விமானத்தைத் தேடும் பணியில் தமிழக மற்றும் இந்திய கடலோர காவல்படை மற்றும் கடற்படை வீரர்கள் ஈடுபட்டனர். இந்நிலையில், கடந்த மாதம் 10ம் தேதி பாண்டிச்சேரி அருகே கடலில் டோர்னியர் விமானத்தின் பாகங்கள் கிடைத்தது. விமானப் பாகங்கள் கிடைத்த பகுதியில் நடத்தப்பட்ட தேடுதலில், ஜூலை 11ம் தேதி 3 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன, என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications