அந்தப் பூவை மறந்துட்டீங்களே மாமா... கலாய்க்கப்படும் ஒரு சீரியல்!
சென்னை: சந்திரலேகா.. திரையுலகில் வரலாறு படைத்த படம்.. ஆனால் டிவியில் இதே பெயரில் ஒளிபரப்பாகி வரும் சீரியல், இப்போது சமூக வலைதளத்தில் வறுபட்டுக் கொண்டிருக்கிறது.
இந்த சீரியலில் இடம் பெற்ற ஒரு காட்சியை வைத்து சில தினங்களாக சமூக வலைதள குசும்பர்கள் செமையாக கலாய்த்து வருகின்றனர். காரணம் அந்தக் காட்சியின் காமெடித்தனம்.
கொஞ்சம் கூட நம்ப முடியாத வகையில் படு செயற்கையாக இருந்த அந்தக் காட்சி தற்போது பலராலும் கேலிக்கூத்தாக்கப்பட்டு வருகிறது.
சந்திரலேகா
சந்திரலேகா சீரியல் பகல் நேர சீரியல் ரசிகைகளின் விருப்பத்துக்குரிய ஒன்று. இதில் வரும் காட்சிதான் தற்போது காமெடியாக மாறிப் போயுள்ளது. அந்தக் காட்சியை இப்போது பார்ப்போம்.
மங்கையர்க்கரசி
மங்கையர்க்கரசி தனது கணவர் சித்தார்த்துடன் கோவிலுக்கு வருகிறார். அவர்களது கல்யாண நாள். ஆனால் என்ன ஏது என்று கணவருக்குச் சொல்லாமலேயே கோவிலுக்கு கூட்டி வருகிறார். அங்கு வைத்து இருவரும் சாமி கும்பிடுகின்றனர். அர்ச்சனை செய்கின்றனர்.
பொட்டு வைத்து பூ வைத்து
இருவரும் சாமி கும்பிட்டு விட்டு அப்படியே கோவில் பிரகாரத்தில் நடந்து வருகின்றனர். பேசியபடி மங்கையர்க்கரசியின் நெற்றியில் குங்குமப் பொட்டு வைக்கிறார் அவரது கணவர். பூவும் வைக்கிறார். அப்போது பூ தவறி விழுந்து விடுகிறது.
டுமீல்
கீழே குனிந்து அவர் பூவை எடுக்க முயன்றபோது பாய்ந்து வந்து மங்கையர்க்கரசியின் நெற்றைப் பொட்டைத் துளைக்கிறது துப்பாக்கித் தோட்டா. கீழே விழுகிறார் மங்கை. ஆனால் சாகவில்லை.
பக்கம் பக்காக வசனம்
அதுவரை ஓகேதான். அதற்குப் பிறகு நடந்ததுதான் காமெடியாகி விட்டது. நெற்றியில் சரியாக போர் போட்டது போல ஒரு ஓட்டை. ரத்தமெல்லாம் கொப்பளிக்கவில்லை. ஆனால் பக்கம் பக்கமாக பேசுகிறார் மங்கையர்க்கரசி.
மாமா அந்தப் பூவை மறந்துட்டீங்களே!
காரைக் கிளப்பும் முன் தான் வைக்க மறந்த பூவை மங்கை கேட்க ஓடிப் போய் அதையும் எடுத்துக் கொண்டு வந்து வைக்கிறார்.
வளவளன்னு
கோவிலி்ல் ரொம்ப நேரம் பேசி முடித்த பின்னர் காரில் போட்டுக் கொண்டு கிளம்புகிறார் சித்தார்த். அங்கும் பேச்சு ஓயவில்லை. வளவளன்னு பேசிக் கொண்டே வருகிறார் மங்கை.
அபி போட்டோ எங்கப்பா
போகும் வழியில் சித்தார்த் மடியில் படுத்துக் கொண்டே மகள் அபி போட்டோவைக் காட்டுங்க என்கிறார் மங்கை. அதையும் எடுத்துக் காட்டுகிறார் சித்தார்த். போட்டைப் பார்த்துக் கொண்டே பொடி நடையாக போய்க் கொண்டிருக்கிறது கார்!
அடப்பாவமே!
இது ஒரு பிளாஷ்பேக் காட்சி. இதை வைத்துத்தான் ஓட்டிக் கொண்டுள்ளனர். காட்சியை இழுப்பதற்காக என்னவெல்லாம் செய்கிறார்கள் இந்த டைரக்டர்கள் என்று கிண்டல்கள் பறக்கின்றன.
கடைசியில் நெற்றியில் பிளஸ் பிளாஸ்திரி போட்டு அந்தப் பெண் செத்துப் போனதாக காட்டி எபிசோடை முடித்து விட்டனர்.!