தூத்துக்குடி துப்பாக்கி சூட்டுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம்.. பஸ்கள் மீது தாக்குதல்
தமிழகம் முழுவதும் 21 பேருந்துகள் அடித்து சேதப்படுத்தப்பட்டுள்ளன.
Recommended Video

தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டினை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடியின் மக்கள் எழுச்சி போராட்டத்தின்போது போலீசார் நடத்திய தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் கொந்தளித்து காணப்படுகிறது.

துப்பாக்கி சூட்டினை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள் சார்பாக கடந்த 2 நாட்களாக ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும், மறியல்களும் நடத்தப்பட்டு வருகின்றன. ஏராளமான அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கண்டனங்களை அறிக்கைகளாக பதிவு செய்து வருகின்றனர்.
மேலும் சில அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். கடந்த இரு தினங்களாக ஆர்ப்பாட்டம் செய்து கைது செய்யப்பட்டவர்கள் எல்லாம் விடுவிக்கப்பட்டும் வருகின்றனர்.
எனினும் துப்பாக்கி சூட்டின் உயிரிழப்பு என்பது இன்று வரை தொடர்ந்து வருவதால் பொதுமக்கள் அதிருப்தியும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். ஆத்திரமடைந்த அடையாளம் தெரியாத சிலர் போலீசாரின் அராஜக போக்கை கண்டித்து வன்முறை சம்பவங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று காலை, மதுரையில் பழங்காநத்தம், ஷெனாய்நகர் உள்ளிட்ட பகுதிகளில் அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய தாக்குதலில் 4 அரசு பேருந்துகள் சேதமடைந்தன.
இதேபோல, தஞ்சை, நெல்லை, குமரி, நாகை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பேருந்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த தாக்குதலில் பேருந்துகளின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் இதுவரை 21 பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து தமிழகமே பதற்றத்தின் உச்சியில் காணப்படுகிறது.












Click it and Unblock the Notifications