தூத்துக்குடியில் கடல்வாழ் உயிரின கண்காட்சி.. ஆர்வத்துடன் கண்டுகளித்த மாணவ மாணவிகள்
தூத்துக்குடியில் நடைபெற்ற கடல்வாழ் உயிரின கண்காட்சியை பள்ளி குழந்தைகள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்
தூத்துக்குடி: மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்தில் நடந்த கடல் வாழ் உயிரின கண்காட்சியை ஏராளமான மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்
இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தின் கீழ் தூத்துக்குடி கடற்கரை சாலையில் இயங்கி வரும் மத்திய கடல் மீன் வள ஆராய்ச்சி நிலையம் பல்வேறு ஆராய்ச்சிகளை செய்து வருகிறது. இந்த ஆராய்ச்சி நிலையத்தை ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆராய்ச்சி நிலையம் சுற்றி காண்பிக்கப்பட்டது. முதன்மை விஞ்ஞானி மனோஜ்குமார் மாணவ, மாணவிகளுக்கு கடல் வாழ் உயிரினங்கள் குறித்து விளக்கம் அளித்தார். கண்காட்சியில் திசு வளர்ப்பு முறையில் செயற்கையாக தயாரிக்கப்பட்ட கடல் முத்துகள் பற்றியும், சிங்கி இறால், நண்டுகள், சுறா வகை மீன்கள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.
மேலும் அலங்கார மீன்கள், ஆக்டோபஸ் உள்பட பல்வேறு கடல்வாழ் உயிரினங்களை நேரில் பார்த்து மாணவர்கள் குதுகலித்தனர். கண்காட்சியில் மீன்கள் மட்டுமல்லாமல் மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள தீவிகள் பற்றியும் அந்த தீவு பகுதியில் உள்ள பவள பாறைகள், கடல் பாசி, கடல் விசிறி, சங்கு இனங்கள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. நேற்றை போல இன்றும் இந்த ஆராய்ச்சி நிலையத்தை பார்வையிட மற்ற எஞ்சிய மாணவ மாணவிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications