பயப்படுகிறேன் என ஸ்டாலின் சொல்கிறார்.. மோடியை நாங்க ஏன் எதிர்க்கனும்? ஆட்சியிலா இருக்கோம்.. எடப்பாடி
அரக்கோணம்: மோடியை எடப்பாடி பழனிசாமி எதிர்த்து பேச மாட்டுக்கிறாரு என்று ஸ்டாலின் பேசுவதாக கூறிய எடப்பாடி பழனிசாமி, "நாங்களா ஆட்சியில் இருக்கிறோம். ஆட்சியில் இருக்கிறவர்கள் தானே எதிர்க்க வேண்டும். எதிர்க்கட்சியில் இருக்கிறவர்கள் போய் என்ன எதிர்க்க முடியும்" என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தமிழக அரசியல் களம் கொதித்துக்கொண்டு இருக்கிறது. திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என தமிழத்தில் 4 முனை போட்டி நிலவுகிறது. தேர்தல் வருகிற 19 ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக நடக்கிறது.

இதனால் அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி இன்று அரக்கோணத்தில் அதிமுக பொதுசெயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அரக்கோணம் தொகுதி வேட்பாளர் ஜெயசீலனை ஆதரித்து அவர் வாக்கு சேகரித்தார்.
அப்போது எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:- எடப்பாடி பழனிசாமி மோடியை எதிர்க்க மாட்டுக்கிறாரு.. அவரை கண்டால் பயப்படுகிறார் என்று முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார்.. என்னப்பா எதிர்க்கிறது.. நாங்களா ஆட்சியில் இருக்கிறோம். ஆட்சியில் இருக்கிறவர்கள் தானே எதிர்க்க வேண்டும். எதிர்க்கட்சியில் இருக்கிறவர்கள் போய் என்ன எதிர்க்க முடியும்.
ஸ்டாலினை போல் முதல்வராக இருந்துகொண்டு இருந்தால் தமிழ்நாட்டு மக்களுக்கு பாதிப்பு உண்டாக்கக்கூடிய எந்த திட்டமாவது தமிழகத்தில் அமல்படுத்த முற்பட்டால் யாராக இருந்தாலும் எதிர்த்து கண்டிப்பாக குரல் கொடுப்போம். உதாரணத்திற்கு காவிரி நதி நீர் பிரச்சினை. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துவிட்டது. அப்போது பாஜகவுடன் கூட்டணியில் இருந்தோம். ஆனால் உச்ச நீதிமன்றம் தீர்ப்பின் படி பாஜக அரசு நடக்கவில்லை.
இதனால், உச்ச நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த மத்திய பாஜக அரசை எத்தனையோ முறை சொல்லி பார்த்தோம். அவர்கள் அமல்படுத்தப்படவிலை. இதற்காக 22 நாட்கள் நாடாளுமன்றத்தில் நாங்கள் குரல் கொடுத்தோம். நாடாளுமன்றத்தை ஒத்தி வைத்தோம். 22 நாட்கள் நாடாளுமன்றம் நடக்கவில்லை. இது அதிமுகவின் வலிமையை காட்டுகிறது.
அழுத்தம் கொடுத்தோம்.. இதனால் மத்திய பாஜக அரசு பணிந்தது. உச்ச நீதிமன்றம் தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை ஆணையம் காவிரி நீர் முறைப்படுத்த குழு அமைக்கப்பட்டது. இது தாங்க அதிமுகவின் சாதனை.. பெண்களை மதிக்கின்ற கட்சி அதிமுக தான். பெண்களை இழிபு படுத்து பேசுகிற கட்சி தான் திமுக. மக்களை சந்திக்காத பொம்மை முதல்வர். தேர்தலின் போது தான் முதல்வர் ஸ்டாலின் டீக்கடையை பார்க்கிறார். கும்பகர்ணன் தூக்கத்தில் இருக்கும் முதல்வர் இனியாவது விழித்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications