ஆயிரக்கணக்கான வீடுகள் நீரில் மூழ்கின.. கண்ணெதிரே அழியும் வயல்கள்.. அதிர்ச்சியில் ஈரோடு
ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் விளைநிலங்கள் நீரில் மூழ்கின.
ஈரோடு: காவிரி ஆற்று வெள்ளத்தில், ஆயிரக்கணக்கான வீடுகளும், தங்கள் உயிர்போல காத்த பயிர்களும் தங்கள் கண்முன்னே அழிவது கண்டு ஈரோடு மாவட்ட மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேட்டூர் மற்றும் பவானி சாகர் அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரினால் ஈரோடு காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இரண்டு லட்சத்திற்கும் அதிகமான கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் செல்வதால் ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
பயிர்கள் மூழ்கின
அதேபோல கொடுமுடி, மலையம்பாளையம், சத்திரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் அங்கு வசித்து வந்த பொது மக்கள் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதேபோல் இந்த பகுதிகளில் பயிரிடப்பட்டு இருந்த மஞ்சள், வாழை உள்ளிட்ட பயிர்களும் வெள்ள நீரில் மூழ்கி உள்ளது.
மூழ்கும் விளைநிலங்கள்
தங்கள் கண்முன்னேயே அனைத்து விளைநிலங்களும் மூழ்கியது பொதுமக்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. தங்களுக்கு உணவு வழங்கப்பட்ட போதிலும் தங்குவதற்கு ஏற்பாடு செய்யவில்லை என அந்த பகுதியில் வசித்து வந்த பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தங்களுக்கு பாதுகாப்பாக தங்குவதற்கான இடம் வழங்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாதுகாப்பு பணி
இதேபோல் காவிரி ஆற்றில் அதிக அளவிலான நீர் செல்வதால் ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களை இணைக்கும் வகையில் கருங்கல்பாளையத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள பழைய பாலத்தில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முகாம்களில் தங்க வைப்பு
சத்தியமங்கலத்தில் உள்ள பழைய ஆட்டோ பாலத்தில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 1020 வீடுகளில் குடியிருப்பவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.