தசாவதாரத்தில் விடிய விடிய காட்சியளித்த கள்ளழகர்… அழகர்மலைக்கு புறப்பட்டார்
மதுரை: வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சியளித்த கள்ளழகர், மண்டூகமுனிவருக்கு சாபவிமோசனம் அளித்துவிட்டு, வியாழக்கிழமை இரவு விடிய விடிய தசாவதார கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
வெள்ளிக்கிழமை நள்ளிரவில் பூப்பல்லக்கில் கள்ளழகர் திருக்கோலத்தில் எழுந்தருளிய அழகர் சனிக்கிழமை காலை மீண்டும் தங்கப்பல்லக்கில் ஏறி அழகர்மலைக்குப் புறப்பட்டார்.

மதுரை அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயில் கொடியேற்றம் மே 1-ம் தேதி தொடங்கி 11-ம் தேதி தேரோட்டத்துடன் நிறைவுற்றது. இதையடுத்து அழகர்மலையிலிருந்து மே 12-ம் தேதி புறப்பட்டு வந்த கள்ளழகர் புதன்கிழமை 14-ம் தேதி வைகை ஆற்றில் இறங்கினார்.
முனிவருக்கு சாபம்
வியாழக்கிழமை (மே 15) வண்டியூர் வைகை ஆற்றில் தேனூர் மண்டகப்படியில் மண்டூகமுனிவருக்கு சாபவிமோசனம் அளித்த சுந்தரராஜப் பெருமாள், இரவில் ராமராயர் மண்டகப்படிக்கு வந்தார்.
தசாவதாரகோலத்தில் அழகர்
ராமராயர் மண்டபத்தில் விடிய, விடிய தசாவதாரம் நடைபெற்றது. முத்தங்கிசேவை, மச்ச, கூர்ம, வாமன, ராம, கிருஷ்ண அவதாரங்களில் அருள்பாலித்த சுந்தரராஜப் பெருமாள் வெள்ளிக்கிழமை காலையில் மோகினி அவதாரத்தில் அருள்பாலித்தார்.
மன்னர் சேதுபதி மண்டபம்
பின் திருமஞ்சனமாகி, அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்தில் ஆழ்வார்புரம் சடாரி மண்டபத்தில் எழுந்தருளினார். அதன்பின் மாலையில் புறப்பாடாகி வைகை மண்டகப்படிகள், கோரிப்பாளையம் மண்டகப்படிகளில் எழுந்தருளியவாறு இரவில் தல்லாகுளம் ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் எழுந்தருளினார்.
புறப்பட்ட அழகர்
சனிக்கிழமை அதிகாலையில், திருமஞ்சனமான பின் தங்கப்பல்லக்கில் கள்ளர் திருக்கோலத்தில் எழுந்தருளி, தல்லாகுளம் கருப்பணசாமி திருக்கோயில் முன்பு அழகர்மலைக்கு புறப்பாடானார்.
வழியனுப்பிய பக்தர்கள்
இந்நிலையில் பகலில் மூன்றுமாவடி வந்த அழகரை மலைக்கு வழியனுப்பும் வகையில் பக்தர்கள் வாணவேடிக்கையுடன் வழிபட்டனர். பின்னர் மாலையில் அழகர் ஒவ்வோர் திருக்கண் மண்டகப்படியில் எழுந்தருளியபடி மலையை நோக்கிச் சென்றார். ஞாயிறு பகலில் அழகர்மலையை சென்றடைவார்.












Click it and Unblock the Notifications