பாவூர்சத்திரம் மாணவர்கள் கொலை... குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி ஆயிரக்கணக்கானோர் மறியல்
நெல்லை: நெல்ல மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே 2 மாணவர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி ஆயிரக்கணக்கான கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாவூர்சத்திரம் அருகேயுள்ள குறும்பலாப்பேரி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் இரண்டு மாணவர்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கொலையாளிகளை கைது செய்யக்கோரி கொலையுண்ட மாணவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் அவர்களது உடலை வாங்காமல் போராட்டம் நடத்தி வந்தனர்.

அதிகாரிகளின் சமரசத்துக்குப் பின் அவர்கள் உடலை பெற்றுக்கொண்டனர். போலீசார் பல கோணங்களில் குற்றவாளிகளை தேடி வருகிறார்கள். இந்த நிலையில் குற்றவாளி செல் போன் கடை நடத்தி வந்த அழகர் தான் என்பதும், அவர்தான் சம்பவ தினத்தன்று இந்த மாணவர்களை இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்றதும் அதன்பின் என்ன நடந்தது தெரியாமல் வழக்கு விசாரணையை தொடர முடியாமல் போலீசார் திணறி வந்தனர்.
இந்த நிலையில், அழகர் திடீரென தற்கொலை கொண்டார். இதனால் வழக்கு மேலும் சிக்கலானது. விசாரணையில், அழகர் செல்போன் கடை நடத்தி வந்ததும், அக்கடையில் "செக்ஸ்" வீடியோ காட்சிகளை இளைஞர்கள், மாணவர்களுக்கு காட்டி அவர்களை வீழ்த்தி இயற்கைக்கு மாறான உறவுக்கு அவர்களை பயன்படுத்தி வந்ததும் தெரிய வந்தது.

அழகரின் கடையில் நடத்தப்பட்ட சோதனையில் இதுதொடர்பான பல ஆதாரங்களும் சிக்கின. ஆனால் அழகர் தற்கொலை செய்து கொண்டதால் வழக்கு தேக்கமடைந்தது. இந்த நிலையில், கொலையான மாணவர்கள் மாரிசெல்வம், முருகன்,ஆகியோரின் உறவினர்கள், புதிய தமிழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர்கள், தேவேந்திரர்கள் கூட்டமைப்பு பிரமுகர்கள் என சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தென்காசி - திருநெல்வேலி சாலையில் மறியலில் ஈடுப்பட்டனர்.

சுமார் 2.30 நேரம் நடந்த இந்த மறியல் காரணமாக போக்குவரத்து நெருக்கடி உருவானது. மாணவ, மாணவிகள், அரசு, தனியார் நிறுவன பணியாளர்கள் பாதிப்படைந்தனர். நெல்லை எஸ்.பி. நரேந்திரன் நாயர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுப்பட்டவர்களோடு பேச்சு வார்த்தை நடத்தினார். குற்றவாளி கைது செய்யப்பட்டால் தாங்கள் கலைந்துப் போவதாக தெரிவித்தனர். இதையடுத்து போரட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்ய எஸ்.பி உத்தரவிட்டார். அதன் பேரில் அனைவரும் கைது செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டனர்.
கொலை குறித்து எஸ்.பி. நாயர் கூறுகையில், இந்தக் கொலை சம்பவம் இயற்கைக்கு மாறான உறவு காரனமாக நடந்துள்ளது. அதற்கான தடயங்கள், ஆதாரங்கள் கிடைத்துள்ளன என்றார்.












Click it and Unblock the Notifications