ஒரே பாணியில் கொலைகள்.. பல்லடம் கொலை வழக்கில் தொடர்பு? ஈரோட்டில் பிடிபட்ட 3 பேரிடம் தீவிர விசாரணை!
ஈரோடு: ஈரோடு அருகே வயதான தம்பதியர் கொலை செய்யப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 3 பேர் சிக்கியுள்ளனர். பல்லடத்தில் இதே பாணியில் நடந்த கொலையையும் இவர்கள் தான் செய்தார்களா என போலீசார் அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே ராமசாமி - பாக்கியம்மாள் தம்பதியர் தங்களது தோட்டத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில், கடந்த மாதம் 29, 30 ஆகிய இரண்டு நாட்களாக வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்துள்ளனர். மேலும், அவரது மகன் செல்போனில் தொடர்பு கொண்டபோதும், எடுக்காததால் சந்தேகமடைந்த மகன், அருகில் உள்ள உறவினர்களிடம் தமது வீட்டுக்கு சென்று பார்க்குமாறு கூறியுள்ளார்.

அப்போது அந்த தம்பதி ரத்த வெள்ளத்தில் இருந்ததை கண்ட அக்கம் பக்கத்தினர், உடனடியாக சிவகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் தம்பதியர் இருவரும் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதை போலீசார் உறுதி செய்தனர்.
மேலும் பாக்கியம்மாள் கழுத்தில் இருந்து தாலிக் கொடி, தங்க வளையல் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததையும் போலீசார் கண்டறிந்தனர். இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக விசாரணை செய்ய மாவட்ட எஸ்பி சுஜாதா உத்தரவின் பேரில் ஏடிஎஸ்பி விவேகானந்தன், மேற்கு மண்டல ஐஜி, டிஐஜி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் 15 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இருப்பினும், இந்த கொலை சம்பவத்தில் கைரேகை, செல்போன் டவர், சிசிடிவி காட்சிகள் எதுவும் கிடைக்காத நிலையில், குற்றவாளிகளை பிடிப்பதில் பெரும் பின்னடைவு இருந்து வந்தது. சம்பவம் நடைபெற்ற நாளுக்கு முன்பும், பின்பும் என மூன்று நாட்கள் மாவட்டம் முழுவதும் பொது இடங்களில் பதிவான சிசிடிவி காட்சிகளை கொண்டு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் மூன்று பேர் ஒரே இருசக்கர வாகனத்தில் செல்லும் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அவர்கள் அரச்சலூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ், மாதேஷ், ஆச்சியப்பன் ஆகியோர் என தெரியவந்தது. இவர்கள் மூவரையும் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக, பல்லடம் அருகே வயதான தம்பதி மற்றும் அவர்களது மகன் படுகொலை செய்யப்பட்டு நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், அந்த சம்பவத்திற்கும் இதற்கும் ஏதேனும் தொடர்புள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த சேமலைக்கவுண்டம்பாளையம் பகுதியில் தெய்வசிகாமணி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் கடந்தாண்டு நவம்பர் 28-ம் தேதி அன்று புகுந்த கும்பல் தெய்வசிகாமணி, அவரது மனைவி அலமேலு அம்மாள், மகன் செந்தில்குமார் என மூன்று பேரை கொடூரமாக அடித்துக் கொலை செய்து வீட்டில் இருந்த 8 பவுன் நகைகளைக் கொள்ளை அடித்துச் சென்றது.
இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக 14 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், எந்த விதமான தடயங்களும் இல்லாமல் போலீஸார் திணறினர். 100 நாட்களைக் கடந்த நிலையில் வழக்கு சிபிசிஐடி போலீஸார் வசம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் தான் ஈரோடு மாவட்டத்தில் இதே பாணியில் கொலைச் சம்பவம் நடந்தது. மேலும் கொலை செய்யப்பட்டவர்கள் அடித்துக் கொலை செய்யப்பட்டதும் ஒரே பாணியில் இருந்ததுதாகக் கூறப்படுகிறது.
அரச்சலூர் பகுதியைச் சேர்ந்த மூன்று பேர் தற்போது பிடிபட்ட நிலையில் அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. இவர்களுக்கு திருப்பூர் சேமலைக்கவுண்டம்பாளையம் பகுதியில் நடைபெற்ற மூவர் கொலையில் தொடர்பிருக்கிறதா என போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications