இப்போதைக்கு இரு முனைப் போட்டி.. ஏற்காட்டில் வருமா 3 முனைப் போட்டி?
சென்னை: ஏற்காடு சட்டசபை இடைத் தேர்தலில் இப்போதைக்கு இருமுனைப் போட்டி நிலவுகிறது. மூன்றாவது கட்சியாக தேமுதிக களம் இறங்குமா அல்லது திமுகவை ஆதரிக்குமா அல்லது பேசாமல் கம்மென்று போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்ளுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஏற்காடு இடைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. கட்சிகளும் வேட்பாளர்களை அறிவிக்கஆரம்பித்து விட்டனர்.
முதலில் திமுக தனது வேட்பாளராக மாறனை அறிவித்தது. அடுத்து அதிமுக தனது வேட்பாளராக பி.சரோஜாவை அறிவித்துள்ளது.

யார் யார் யாருக்கு ஆதரவு?
திமுகவைப் பொறுத்தவரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அக்கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. தி.க. ஆதரவு தெரிவித்துள்ளது. அதிமுகவைப் பொறுத்தவரை இடதுசாரிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. கூட்டணிக் கட்சிகளும் படிப்படியாக ஆதரவு தெரிவித்து வருகின்றன.

பாமக - பாஜக புறக்கணிப்பு
இந்தத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று பாமகவும், பாஜகவும் அறிவித்து விட்டன.

திரிசங்கு நிலையில் தேமுதிக
தேமுதிக திரிசங்கு நிலையில் உள்ளது. தேமுதிகதான் இதில் முக்கியமாக கவனிக்கப்படுகிறது.

போட்டியிடுவார்களா...?
தேமுதிக இந்தத் தேர்தலில் போட்டியிடுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. போட்டியிட்டால் தனித்துப் போட்டியிடுவார்களா அல்லது வேறு யாருடைய ஆதரவையாவது கோருவார்களா என்றும் தெரியவில்லை.

பேசாமல் போட்டியிடாமல் இருந்து விட்டால்...??
இதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்பது தெரியவில்லை. அப்படி போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டால் அதைச் சொல்லியே வருகிற லோக்சபா தேர்தல் வரை அதிமுக ஓட்டி எடுத்து விடும் என்ற அச்சமும் தேமுதிகவினருக்கு உள்ளது.

3 முனைப் போட்டி வரலாம்
தற்போதைய நிலையில் திமுக, அதிமுக மட்டுமே களத்தில் உள்ளன. இதில் தேமுதிக சேருமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. தேமுதிகவும் போட்டியிட்டால் அது மூன்று முனைப் போட்டியாக மாறும்.

திமுக பிரசாரம் தொடக்கம்
இதற்கிடையே திமுக வேட்பாளர் மாறன் இன்று தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டார். வீதி வீதியாக சென்று அவர் இன்று வாக்கு சேகரித்தார்.

இது 4வது இடைத் தேர்தல்
அதிமுக 2011ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது. அதன் பின்னர் நடைபெறும் 4வது இடைத் தேர்தல் இது. இதற்கு முன்பு, திருச்சி மேற்கு, புதுக்கோட்டை, சங்கரன்கோவில் ஆகிய தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடந்தது நினைவிருக்கலாம். மூன்றிலுமே அதிமுகதான் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications