ஆரணி பைபாஸ் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து! 3 இளைஞர்கள் பலி!
ஆரணி: ஆரணி அருகே பைபாஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து ஆரணி கிராமிய போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அரியப்பாடி கிராமத்தை சேர்ந்தவர்கள் மணியின் மகன் சரண்ராஜ் (21), ராதாகிருஷ்ணனின் மகன் ராஜேஷ் (19). அது போல் முள்ளிப்பட்டு ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் ரமேஷின் மகன் மணிகண்டன் (22).

நண்பர்களான இவர்கள் மூவரும் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்கள். இந்த நிலையில் சனி, ஞாயிறு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த இவர்கள், நேற்று புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி ஆரணியில் உள்ள பெருமாள் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.
பிறகு ஆரணியில் தங்களது பிற நண்பர்களுடன் நேரத்தை செலவிட்ட அவர்கள் மூவரும் ஒரே பைக்கில் இரவு 11 மணி அளவில் அரியப்பாடிக்கு சென்றுக் கொண்டிருந்தனர். சரண்ராஜும், ராஜேஷும் முதலில் மணிகண்டனை வீட்டில் விடுவதற்காக சென்றனர். அப்போது ஆரணி பைபாஸ் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 3 பேரும் தூக்கிவீசப்பட்டனர்.
இதில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர். இந்த நிலையில் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் இந்த விபத்து குறித்து ஆரணி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று 3 பேரின் சடலங்களையும் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த மூவரையும் மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் எது என்பது குறித்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒரே நேரத்தில் 3 நண்பர்களும் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications