அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்.. ஒரு உயிரை காக்க போய் பரிதாபமாக பறிபோன 3 உயிர்கள்!
அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
மதுரை: அன்பு என்னும் வலையில் பின்னப்பட்டதால்தான் இந்த உலகம் இன்னமும் இயங்கி கொண்டிருக்கிறது. மனிதநேயம், இரக்கம், பாசம் என்னும் பன்முகப் பெயர்கள் இருந்தாலும் அனைத்தும் கட்டுண்டு கிடப்பது அன்பினால்தான். இது மனித உயிர்களுக்கு மட்டுமல்ல, அண்ட சராசரத்திலுள்ள அனைத்து உயிர்களுக்கும் பொருந்தும். தினமும் உலகின் ஏதோ ஒரு மூலையில் ஏதோ ஒரு ரூபத்தில் அன்பின் அடையாளங்கள் வெளிப்பட்டு கொண்டுதான் இருக்கிறது. அப்படித்தான் உசிலம்பட்டியிலும் வெளிப்பட்டுள்ளது.
மதுரை உசிலம்பட்டியில் உள்ளது கல்கொண்டான்பட்டி. இந்த பகுதியை சேர்ந்தவர் முக்ஹூசு. இவர் ஒரு நாயை வளர்த்து வந்தார். அதன் மீது முக்ஹூசுக்கு கொள்ளை பிரியமாம். அவர் எங்கு சென்றாலும் நாயும் அவர் பின்னாலேயே சென்றுவிடுமாம்.
இந்நிலையில், இந்நிலையில் உசிலம்பட்டி பகுதிகளில் நேற்று மாலை லேசான மழை பெய்தது. அப்போது அடித்த பலத்த காற்றின் காரணமாக, விவசாயிக்கு சொந்தமான தோட்டம் ஒன்றில் மின் ஒயர் ஒன்று அறுந்து கீழே விழுந்து கிடந்துள்ளது.
இதனை அறியாத அந்த வழியாக சென்ற மாடு ஒன்று மின்கம்பியில் சிக்கி கொண்டது. இதில் மின்சாரம் உடலில் பாய்ந்து மாடு தவித்தது. அப்போது அவ்வழியாக முக்ஹூசு சென்று கொண்டிருந்தார். மாடு போராடுவதை கண்ட அவர், எப்படியாவது காப்பாற்றி விட்டு விட வேண்டும் என்று நினைத்து அருகில் சென்று மாட்டை பிடித்தார். மாட்டை தொட்டதும், அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது.
இதனால் அவரும் அலறி துடிக்க ஆரம்பித்தார். இதனை கண்ட அவரது நாய் தன் எஜமானனை வாயால் கவ்வி இழுத்து காப்பாற்றிவிட முயன்றது. அதன்மீதும் மின்சாரம் பாய்ந்தது. கடையில் மாடு, முக்ஹூசு, நாய் என 3 பேருமே சம்பவ இடத்திலேயே மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனர்.
பின்னர் தகவலறிந்து வந்த காவல்துறையினர் 3 உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மின்சாரம் தாக்கி அடுத்தடுத்து 3 உயிர்கள் பறிபோன சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை மட்டுமல்லாமல், தன் எஜமானனை காப்பாற்ற முயன்று உயிரிழந்த அந்த நாயின் செயல் அனைவருக்கும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அன்புக்கும் உண்டோ அடைக்குந்தாழ்?!