வீடு கொடுக்க மறுப்பு... வீட்டை அடித்து நொறுக்கிய மூன்று பெண்கள்!
வீடு கொடுக்க மறுத்ததால், வீட்டு உரிமையாளர் கண்முன்னே மூன்று பெண்கள் சேர்ந்து வீட்டை அடித்து நொறுக்கினர்.
சென்னை: கோவூர் சாரதா நகரில் வீட்டு உரிமையாளர், வாடகைக்கு வீடு தர மறுத்ததால் மூன்று பெணகள் வீட்டை அடித்து நொறுக்கினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு உண்டானது.
கோவூர் சாரதா நகரில் வசிப்பவர் சுரேஷ்ராஜன். இவரிடம் மூன்று பெண்கள் மசாஜ் பார்லர் நடத்த வீடு கேட்டு வந்துள்ளனர். இவர் தன் வீட்டை வாடகைக்கு தர முடியாது என கூறியுள்ளார். இதுகுறித்து சுரேஷ் ராஜனுக்கும் வாடகைக்கு வீடு கேட்டு வந்த பெண்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த தகராறிலும் அவர் வீடு தர மறுத்ததால், ஆத்திரமடைந்த மூன்று பெண்கள் வீட்டின் மீது கல்லை வீசி எறிந்து துவம்சம் செய்தனர். அதோடு நில்லாமல் உருட்டுக் கட்டைகளைக் கொண்டு வீட்டின் முன் இருந்த காரை அடித்து நொறுக்கினர். அக்கம்பக்கத்தினர் இதனை வேடிக்கை பார்த்தார்களே ஒழிய யாரும் வந்து தடுக்கவில்லை.
இதனால் சுரேஷ்ராஜன் போலீசாருக்கு தொலைபேசி மூலம் புகார் கொடுத்தார். ஆனால், அப்பெண்கள் வீட்டை அடித்து நொறுக்கி முடித்துச் சென்றபின்பே போலீசார் வந்தனர் என சுரேஷ்ராஜன் வருத்தத்துடன் தெரிவித்தார்.
மூன்று பெண்கள் தெருவில் இறங்கி கட்டைகளையும் கற்களையும் கொண்டு வீட்டை அடித்து நொறுக்கியதைக் கண்ட பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.