திருச்சியில் அஸ்திவாரம் தோண்டியபோது விபத்து 3 பெண்கள் மரணம்: மூவர் கவலைக்கிடம்
திருச்சி: கட்டிடம் கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டியபோது, சுவர் இடிந்து விழுந்ததில், இடர்பாடுகளில் சிக்கிக்கொண்ட 6 பேரில் 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
திருச்சி, ஹோலிகிராஸ் பெண்கள் கல்லூரிக்கு செல்லும் வழியில், கிருஷ்ணாஸ் ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலை ஒட்டியுள்ள தெருவில், பொன்னகரைச் சேர்ந்த கமலேஷ் பட்டேல் என்பவருக்கு சொந்தமான மரப்பட்டறை இருந்தது. அந்த இடத்தில் தற்பொழுது கட்டடம் கட்டி வருகிறார்.
இதற்கான கட்டுமானப் பணி, சில நாட்களுக்கு முன் துவங்கிய நிலையில், வியாழக்கிழமை காலை, அஸ்திவாரம் தோண்டும் பணி நடந்தது.
இந்த பணியில் திருச்சி சமயபுரத்தை அடுத்துள்ள மருதூர் கிராமத்தைச் சேர்ந்த 11 பேர் ஈடுபட்டனர். இவர்கள் ஓட்டலின் பின்புறம் அஸ்திவாரம் தோண்டினர். ஓட்டல் சமையல் கூடத்திற்கு சரியான அஸ்திவாரம் இல்லாததால், 6 இடங்களில் முட்டு கொடுத்தபடி தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர்.
இந்நிலையில், மதிய உணவை சாப்பிட்டுவிட்டு அவர்கள் திரும்பி வந்தது பார்த்தபோது, அவர்கள் தோண்டிய பள்ளத்தில் மண் சரிந்திருப்பதை பார்த்துள்ளனர். சரிந்த மண்ணை அள்ளுவதற்காக 6 பேரை மட்டும் பள்ளத்தில் இறக்கி மண்ணை வெளியே எடுத்து போட்டு கொண்டிருந்தனர்.
அந்த சமயத்தில், ஓட்டல் சமையல் அறையின் பக்கச் சுவர் இடிந்து பள்ளத்தில் விழுந்தது. இதில், பள்ளத்தில் இறங்கி வேலை செய்து கொண்டிருந்த கண்மணி, உமாராணி, பூங்கோதை, வாசுகி, சரளா, ரமேஷ் ஆகிய 6 பேரும் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். அவர்கள் மேல் ஒட்டலின் பின்புறம் வைக்கப்படிருந்த மூன்று ஜெனரேட்டர்களும் விழுந்தது.
இந்த சம்பவத்தையடுத்து, அக்கம்பக்கத்தில் உள்ள பொதுமக்கள்ளும், போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
மீட்பு பணிகள் விரைவாக மேற்கொண்ட நிலையிலும் கண்மணி, உமாராணி, பூங்கோதை ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மற்ற மூவரும் உயிருக்கு போராடி வரும் நிலையில், திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்ட கலெக்டர் ஜெயஸ்ரீ, மீட்பு பணிகளை முடுக்கிவிட்டு, இந்த சம்பவத்தில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
இதனிடையே விபத்துக்குக் காரணமான கட்டட உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார் அவர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications