தேர்தல் வெற்றி வாய்ப்பு பற்றி செய்தியாளர் கேட்ட கேள்வி.. ஸ்டாலின் காட்டிய ‘சிக்னல்’ தான் ஹைலைட்!
மதுரை: நடந்து முடிந்துள்ள தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, கட்டை விரலை உயர்த்தி உற்சாகமாக 'தம்ப்ஸ் அப்' காட்டியுள்ளார் ஸ்டாலின். தேர்தல் ரிசல்ட் பற்றிய கேள்விக்கு ஸ்டாலின் உற்சாகமாக ரியாக்ட் செய்துள்ளது கவனம் பெற்றுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. அன்று காலை 7 மணியில் இருந்தே வாக்காளர்கள் வருகை அதிகரித்து காணப்பட்டது. இளைஞர்கள், இளம்பெண்கள், வயதானவர்கள் என அனைத்து தரப்பினரும் உற்சாகத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களித்தனர்.

சட்டமன்ற தேர்தலில் வரலாற்று சாதனையாக தமிழகத்தில் 85.15 சதவீத வாக்குகள் பதிவானது. வாக்கு இயந்திரங்கள் தற்போது வாக்கு எண்ணும் மையங்களில் ஸ்ட்ராங் ரூம்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. வரும் மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக அரசியல் கட்சிகள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டன. ஆளும் திமுக, எதிர்க்கட்சியான அதிமுக, தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், சசிகலா - ராமதாஸ் அணி என 5 முனை போட்டி நிலவியது. தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளில் 4,023 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.
சட்டமன்ற தேர்தலையொட்டி திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்குகள் திரட்டினார். அவர், ஒரு மாத காலம் ஓய்வின்றி தேர்தல் களப்பணியில் மும்முரமாக ஈடுபட்டார். சட்டசபை தேர்தலுக்கு முன் முந்தைய நாளும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களோடு வீடியோ கால் வாயிலாக ஆலோசனை நடத்தினார் ஸ்டாலின்.
இந்த நிலையில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தினார் முதல்வர் ஸ்டாலின். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திமுக வேட்பாளர்களைச் சந்தித்து, வாக்குப்பதிவு பற்றியும், வெற்றி வாய்ப்பு குறித்தும் கேட்டறிந்தார்.
இதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடைக்கானல் சென்று ஓய்வு எடுக்க திட்டமிட்டார். அதன்படி அவர், சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை 11 மணி அளவில் குடும்பத்துடன் மதுரை புறப்பட்டுச் சென்றார். மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக கொடைக்கானல் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு ஓய்வெடுக்கிறார். கொடைக்கானலில் அவர் ஒரு வார காலம் குடும்பத்தினருடன் தங்கி இருந்து ஓய்வு எடுக்க உள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலினின் வருகையை முன்னிட்டு கொடைக்கானலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனிப்பட்ட பயணமாக குடும்பத்தினருடன் துபாய் சென்றுள்ளார். தேர்தல் பரபரப்பு முடிவடைந்துள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை நாளுக்குள் அரசியல் தலைவர்கள் ஓய்வெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், கொடைக்கானல் செல்வதற்காக மதுரை வந்த முதலமைச்சர் ஸ்டாலினிடம், சட்டசபை தேர்தலில் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, கட்டை விரலை உயர்த்தி 'தம்ப்ஸ் அப்' காட்டினார் ஸ்டாலின். செய்தியாளர்களின் கேள்விக்கு ஸ்டாலின் உற்சாகமாக சைகை காட்டியுள்ளது கவனம் பெற்றுள்ளது.
முன்னதாக மதுரை விமான நிலையத்தில், முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு வரவேற்பு கொடுக்க யாரும் வர வேண்டாம் எனக் கூறிய நிலையில் தமிழக முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினர் மட்டுமே மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்தனர். சபாநாயகரும், ராதாபுரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளருமான அப்பாவு முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு வரவேற்பு அளித்தார்.













Click it and Unblock the Notifications