திருச்செந்தூர் கோவில் யானை குமரன் உடல்நலக் குறைவால் மரணம் – கோவிலிலேயே அடக்கம்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோவில் ஆண் யானை குமரன் இன்று காலை உடல்நலக்குறைவால் தூக்கத்திலேயே மரணமடைந்தது அப்பகுதி மக்களையும், பக்தர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 13 வயதான குமரன் என்ற ஆண் யானையும், தெய்வானை என்ற பெண் யானையும் உள்ளது. இந்த யானைகள் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்குவதோடு, திருவிழா நாட்களில் பங்கேற்று வந்தன.

கடந்த சில நாட்களாக ஆண் யானை குமரன் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற யானைகள் புத்துணர்வு முகாமுக்கு செல்லவில்லை.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக குமரன் யானைக்கு வயிற்றுபோக்கு ஏற்பட்டு மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து மும்பையில் இருந்து கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. எனினும் சோர்வுடன் இருந்து வந்த யானை இன்று அதிகாலை திடீரென இறந்தது.

இது குறித்து கோவில் இணை ஆணையர் ஞானசேகரனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. கோவில் நிர்வாகம் சார்பில் யானையின் உடலுக்கு மாலைகள் அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஏராளமானோர் யானைக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இறந்த யானையின் உடல் இன்று கோவில் வளாகத்திலேயே அடக்கம் செய்யப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications