திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க இனி சென்னை போஸ்ட் ஆபிசில் முன்பதிவு செய்யலாம் !
திருப்பதி செல்லும் பக்தர்கள் இனி சென்னையிலுள்ள தபால் நிலையங்களிலேயே முன்பதிவு செய்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை: திருப்பதி வெங்கடாஜலபதி சுவாமியை தரிசனம் செய்ய சென்னையிலுள்ள தபால் நிலையங்களிலேயே முன்பதிவு செய்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் புகழ் பெற்ற கோவில்களில் முதன்மையானது திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் ஆகும். இந்த கோவிலுக்கு தமிழகத்தில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் தினசரி ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்ய செல்கின்றனர். மேலும் இந்தியாவில் உள்ள சாதாரண குடிமகன் முதல் முதல்குடிமகனான ஜனாபதி வரை இந்த கோவிலுக்கு விரும்பி செல்வதால், எப்போதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில், திருப்பதி வெங்கடாஜலபதி சுவாமியை தரிசனம் செய்ய சென்னையிலுள்ள தபால் நிலையங்களிலேயே முன்பதிவு செய்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து வர்த்தக மேம்பாட்டின் (பொது) போஸ்ட் மாஸ்டர் ஜே.டி.வெங்கடேஸ்வரலு கூறியதாவது : பக்தர்கள் திருப்பதி செல்வதற்கு 56 நாட்களுக்கு முன்பாகவே தங்கள் முன்பதிவு கூப்பனை தபால் நிலையங்களில் புக் செய்து பெற்றுக் கொள்ளலாம். தற்போது காலை 10, 11, பகல் 12, 1 மணி என நான்கு கட்டங்களாக சுவாமி தரிசனம் பெறுவதற்கு டிக்கெட் முன்பதிவு நடைபெற்று வருகிறது.
முதற்கட்டமாக இந்த வசதி நேற்று முதல் தி.நகர் மற்றும் மயிலாப்பூர் தபால் நிலையங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக சென்னை மண்டல தலைமை தபால் நிலையம் திருப்பதி தேவஸ்தானத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. ஒரு டிக்கெட்டின் விலை ரூ.300. மேலும் ஒவ்வொருவரும் 2 லட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். பக்தர்கள் முன்பதிவு செய்ய வரும் போது, அவர்களுடைய புகைப்பட அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும்.
தி.நகர் தபால் நிலையத்தில் முன்பதிவு துவங்கிய 2 மணி நேரத்திலேயே 10 டிக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஒரு டிக்கெட் விற்பனை செய்தால், தபால் நிலையத்துக்கு ரூ.3 வருமானம் கிடைக்கிறது. நாள் ஒன்றுக்கு தபால் நிலையங்கள் மூலம் 5 ஆயிரம் முன்பதிவு டிக்கெட்கள் வரை புக் செய்ய திருப்பதி தேவஸ்தானம் அனுமதித்துள்ளது. பொதுமக்களிடம் வரவேற்பை பொறுத்து, மற்ற தபால் நிலையங்களிலும், இந்த முன்பதிவு முறையை அமல்படுத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.