மக்கள் நலக்கூட்டணிக்கு வாங்க... நாங்க 'கிங்' ஆக்குறோம்... கேப்டனை அழைக்கும் திருமா
சென்னை: மக்கள் நலக் கூட்டணிக்கு விஜயகாந்த் வந்தால் அவரை‘கிங்' ஆக்குவது பற்றி பரிசீலிப்போம் என்று அக்கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் கூறியுள்ளார்.
தேமுதிக அரசியல் திருப்புமுனை மாநாடு, காஞ்சிபுரம் வேடலில் சனிக்கிழமை நடைபெற்றது இதில் விஜயகாந்த் நான் ‘கிங்' ஆக வேண்டுமா அல்லது ‘கிங் மேக்கராக' வேண்டுமா என தொண்டர்களிடம் கேள்வி எழுப்பினார். அவர் ‘கிங்' ஆக இருக்க வேண்டும் என்று தொண்டர்கள் கூறினர்.

இதனால், தேமுதிக தலைமையில் புதிய கூட்டணி அமையலாம் என்று கூறப்பட்டது.
விஜயகாந்தை கூட்டணிக்கு வருமாறு திமுக, காங்கிரஸ், மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கு பதில் காஞ்சிபுரம் மாநாட்டில் கிடைக்கும் என்று கூறப்பட்ட நிலையில் விஜயகாந்தின் கிங் பேச்சும் பிரேமலதா விஜயகாந்தின் திமுக விமர்சனமும் தொண்டர்களிடையே ஒருவித குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதே நேரத்தில் மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், விஜயகாந்த் பேச்சுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். தேமுதிக மாநாட்டில் திமுக, அதிமுகவை பிரேமலதா விமர்சித்துள்ளார். இதன்மூலம், அந்த மாநாட்டில் ஒரு விஷயத்தை தேமுதிகவினர் தெளிவுபடுத்தியுள்ளனர்.
விஜயகாந்தை ‘கிங்' ஆக்க வேண்டும் அதாவது, அவரை முதல்வராக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் எண்ணமாக உள்ளது.
திமுகவும், அதிமுகவும் அவரை முதல்வராக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மீதமிருப்பது இரண்டே வழிதான். ஒன்று பாஜக, மற்றொன்று மக்கள் நலக் கூட்டணி.
அதிமுகவுடன் பாஜக காட்டும் நெருக்கம், விஜயகாந்துக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் என்ற சூழல்தான் இப்போது உள்ளது. எனவே, மக்கள் நலக் கூட்டணிக்கு அவர் வந்தால், அவரை முதல்வர் வேட்பாளர் ஆக்குவது பற்றி நாங்கள் 4 கட்சித் தலைவர்களும் பேசி முடிவெடுப்போம் என்று கூறியுள்ளார்.
விஜயகாந்தின் கிங் பேச்சுக்கு பாஜக தலைவர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியும், திமுக கூட்டணிக்கு விஜயகாந்த் வருவார் என்றே நம்பிக்கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications