கூலிப்படை கலாச்சாரம் அதிகரித்துவிட்டது... அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுக: திருமாவளவன்
சென்னை: தமிழகத்தில் கூலிப்படை கலாசாரம் அதிகரித்துள்ளதைக் கட்டுப்படுத்தும் விதமாக, அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட மாநில அரசு முன்வர வேண்டும் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நாள்தோறும் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்செயல்கள் அதிகளவில் நடைபெறுகின்றன.

குறிப்பாக, கடந்த வாரம் சென்னை நுங்கம்பாக்கத்தில் சுவாதி என்ற இளம்பெண் மர்ம நபரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.இதற்கு, அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், சுவாதியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து, ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுவாதி கொலை செய்யப்பட்டு கிடந்த புகைப்படத்தை பார்த்தேன் தொழில் முறை கொலையாளிகள் (கூலிப்படையினர்) கொலை செய்தது போல் இருக்கிறது.
தமிழகம் முழுவதும் சமீபத்தில்நடக்கும் கொலைகளில் அடுக்கடுக்காக கூலிப்படை கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. இதற்கு தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் தமிழக முதல்வர் சட்டசபையில் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்வாதாக கூறிவருகிறார்.
சுவாதி கொலையை கவுரவ பிரச்சனையாக பார்க்காமல் இதை சமூக பிரச்சனையாக பார்க்க வேண்டும். தமிழகத்தில் அதிகரித்து வரும் கூலிப்படை கலாச்சாரத்தை ஓடுக்க அரசு சார்பில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். இதற்காக நடவடிக்கையில் தமிழக அரசு இறங்க வேண்டும் என்றும் திருமாவளன் தெரிவித்துள்ளார். சுவாதி குடும்பத்திற்கு தமிழக அரசு 25 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications