கந்துவட்டி தீக்குளிப்பு, கார்ட்டூனிஸ்ட் பாலா கைது - முகநூலில் பதிவிட்ட நெல்லை ஆட்சியர்
கார்ட்டூனிஸ்ட் பாலா கைது குறித்து ஆட்சியர் சந்தீப் நந்தூரி முகநூலில் பதிவிட்டுள்ளார்.
Recommended Video
நெல்லை : கார்ட்டூனிஸ்ட் பாலா கைது குறித்தும், கந்துவட்டி தீக்குளிப்பு குறித்தும் முகநூலில் கருத்து தெரிவித்து இருக்கிறார் நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி.
கடந்த அக்டோபர் 24ம் தேதி கந்துவட்டி கொடுமை தாங்காமல் இசக்கி முத்து என்பவர் தன் மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். நான்கு முறை ஆட்சியரிடம் மனு கொடுத்தும், போலீஸில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததே காரணம் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் கார்ட்டூனிஸ்ட் பாலா என்பவர் இந்த தீக்குளிப்பு சம்பவம் குறித்து கார்ட்டூன் ஒன்றை தான் நடத்தி வரும் இணையப் பத்திரிகையிலும், சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டார். அதில் முதல்வர், நெல்லை மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் தீக்குளிப்பை தடுக்காமல் வாய்மூடி நிற்கும் வகையில் அந்த சித்திரம் வரையப்பட்டு இருந்தது.
முகநூலில் பதிவிட்ட ஆட்சியர்
இதனால், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியின் புகாரில் நேற்று சென்னையில் பாலா கைது செய்யப்பட்டு நெல்லை அழைத்துச் செல்லப்பட்டார். கருத்து சுதந்திரத்தை நெரிப்பதாக அரசியல் மற்றும் பத்திரிகையாளர்கள் இதுகுறித்து கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், சமூக வலைத்தளமான முகநூலில் திருநெல்வேலி ஆட்சியர் அலுவலக பக்கத்தில், இசக்கி முத்து குடும்பம் தீக்குளிப்பு சம்பவம் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக வெளியிடப்பட்ட பதிவை பகிர்ந்து தனது கருத்தையும் சந்தீப் நந்தூரி பகிர்ந்து இருக்கிறார்.
முதற்கட்ட விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்
அதில், எனக்குத் தகவல் தெரிந்தவுடனேயே நடவடிக்கை எடுக்கச் சொல்லி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்களும் முதல்கட்ட நடவடிக்கை எடுத்து இருக்கிறார்கள். மேலும் இந்த சம்பவம் குறித்து பல தகவல்கள் வெளிவந்துள்ளன.ஆனால், ஊடகங்களில் இந்த விஷயங்கள் அனைத்தும் மறைக்கப்பட்டு உணர்ச்சி பூர்வமாகவே இந்த விஷயம் மக்களிடம் கொண்டு செல்லப்படுகிறது.
கருத்து சுதந்திரத்தின் பெயரில்...
அதேபோல, கார்ட்டூனிஸ்ட் பாலா கைதும் அரசு கருத்து சுதந்திரத்தை தவறாகக் கையாள்வதாக சித்தரிக்கப்படுகிறது. அனைவருக்கும் அவரவர் எண்ணத்தை வெளிப்படுத்தும் உரிமை உள்ளது. அதை நான் மதிக்கிறேன். நானும் கூட கார்ட்டூன்களை ரசிப்பவன் தான். ஆனால், உண்மை என்னவென்று தெரியாமல் ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டுவது தவறு. கருத்து சுதந்திரத்தின் பெயரில் தவறான கருத்தை பரப்பியதால் தான் அவர் கைது செய்யப்பட்டார் என்று தெரிவித்து உள்ளார்.
மனம் உடைந்துவிட்டது
அந்தக் குழந்தைகளை மருத்துவமனையில் பார்த்தபோது நான் உடைந்துவிட்டேன். இதில் தவறு யார் மீது இருக்கிறது என்பது விசாரணையில் தெரிய வரும். நான் இந்தப் பணிக்கு உண்மையாக இருக்கிறேன் அப்படி இருக்கும் பட்சத்தில் என் மீது ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டுகள் வைப்பதை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன்' என்று அவர் பதிவிட்டு இருக்கிறார்.