நெல்லை மாவட்ட கலெக்டர், கோட்டாட்சியர் கார்கள் ஜப்தி
நெல்லை: நெல்லை மாவட்டம் நாங்குநேரி விஜயநாராயணம் ஐஎன்எஸ் கட்டபொம்மன் கப்பல் படை தளத்திற்கு இடம் வழங்கிய ஜெபராஜ் குடும்பத்திற்கு ரூ. 15 லட்சம் இழப்பீடு தொகை வழங்காததால் நீதிமன்ற உத்தரவுப்படி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் கோட்டாட்சியர் ஆகியோரின் வாகனங்கள் ஜப்தி செய்யப்பட்டது.
பாளையங்கோட்டை அருகேயுள்ள ரெட்டியார்பட்டி சாலையில் இந்திய கடற்படை மையம் அமைப்பதற்காக 38 ஏக்கர் நிலத்தை கடந்த 1982-ம் ஆண்டு நெல்லை மாவட்ட நிர்வாகம் கையகப்படுத்தியது. அப்போது நிலத்தின் உரிமையாளர்களான பாளையங்கோட்டையை சேர்ந்த சுப்பராயலு, பத்மநாபன், கேசவன் ஆகியோர் ஒரு சென்ட் நிலம் ரூ.200க்கு கையகப்படுத்தியதால் எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே சந்தை விலை மதிப்பு தொகையை தர வேண்டும் என அவர்கள் புகார் கூறினர்.

மேலும் இது தொடர்பாக அவர்கள் 3 பேரும் கடந்த 1985-ம் ஆண்டு நெல்லை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு கட்டங்களில் தீர்ப்பு வந்தும், பின்னர் புகார் தாரர்கள் மேல் முறையீடு செய்து வந்த நிலையில் மனுதாரர்களான சுப்பராயலு, பத்மநாபன், கேசவன் ஆகிய 3 பேரும் இறந்துவிட்டனர்.
இந்நிலையில் இறந்த 3 பேரின் வாரிசுதாரர்கள் நெல்லை மாவட்ட முதன்மை சார்பு நீதிமன்றத்தில் இழப்பீடு தொகை கேட்டு தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி ஹேமந்தகுமார் பத்மநாபனின் வாரிசுதாரர்களான ஜெயராஜ் குமார், ரவிக்குமார், சாந்தி ஆகியோர் குடும்பத்திற்கு இழப்பீடு தொகையாக ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் அல்லது கலெக்டர் அலுவலக பொருட்கள் ஜப்தி செய்யப்படும் என கடந்த 17.2.2016 அன்று உத்தரவிட்டார்.

இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பத்மநாபனின் வாரிசுதாரர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு முதல் கட்டமாக ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது. மீதமுள்ள ரூ.15 லட்சம் அடுத்த கட்டமாக வழங்கப்படும் என முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை அந்த பணத்தை மாவட்ட நிர்வாகம் வழங்காததால் இழப்பீட்டு தொகையை முழுமையாக வழங்கக் கோரி மீண்டும் மனுதாரர்கள் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.
இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டு தொகை முழுமையாக வழங்கப்படாததால் மாவட்ட ஆட்சியரின் கார் மற்றும் கோட்டாட்சியரின் காரை ஜப்தி செய்ய நீதிபதி ஹேமந்தகுமார் உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து இன்று காலை வழக்கம் போல கலெக்டர் கருணாகரன் அலுவலகத்திற்கு காரில் வந்தார். பின்னர் அவர் காரை விட்டு இறங்கி தனது அறைக்கு சென்றார். அப்போது வளாகத்தில் அமினாக்கள் மாவட்ட ஆட்சியரின் கார் கண்ணாடியில் அது ஜப்தி செய்யப்பட்டதாக நோட்டீஸ் ஒட்டினர்.
மேலும் அமினாக்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் கோட்டாட்சியர் காரில் நோட்டீஸ் ஒட்டுவதற்காக அங்குள்ள அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு கோட்டாட்சியரின் கார் இல்லை. ஆட்சியரின் வாகனத்தில் ஜப்தி நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications