கந்து வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் யார்? யார்? பட்டியல் சேகரிப்பு - வீடியோ
கந்து வட்டிக்கு பணம் கொடுப்பவர்களின் பட்டியலை நெல்லை மாவட்ட காவல்துறையினர் சேகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருநெல்வேலி: கந்து வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் பற்றிய பட்டியலை நெல்லை மாவட்ட காவல்துறையினர் சேகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கந்து வட்டிக்கு பணம் வாங்கியதால் கடன் தொல்லை தாங்காமல் நெல்லை ஆட்சியர் அலவலகத்தில் இசக்கி முத்து என்பவர் தனது மனைவி சுப்புலட்சுமி, 5 வயது மகள் மதி சரண்யா மற்றும் 2 வயது குழந்தை அட்சய ப்ரணீதா ஆகியோருடன் நேற்று தீ குளித்தார். இதில் மூவர் உயிரிழந்தனர். இசக்கி முத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கந்துவட்டி கொடுமையால் ஆட்சியர் அலுவலகத்தில் கூலித்தொழிலாளி தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் வெளியான இந்த வீடியோ காட்சிகளும் பார்ப்போரின் நெஞ்சை உலுக்குவதாக இருந்தது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கந்து வட்டிக்கு பணம் கொடுத்து மிரட்டியவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மாவட்டம் முழுவதும் வட்டிக்கு பணம் கொடுப்பவர்களின் பட்டியலை சேகரிக்க போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.