மதுரையில் திருப்பரங்குன்றம் தாலுகா உதயம்!
திருப்பரங்குன்றம்: சென்னையில் 5 புதிய தாலுகா உட்பட 23 தாலுகாக்களை முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம் ஆகிய தாலுகா அலுவலகங்களை தமிழக முதல்வர் ஜெயலலிதா, வழக்கம்போல் வீடியோ காண்பரன்ஸ் மூலம் புதன்கிழமை திறந்து வைத்தார்.
அவனியாபுரம், ஜெய்ஹிந்த்புரம், மாடக்குளம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது இந்த திருப்பரங்குன்றம் தாலுகா.
கோவில் நகரமாகவும் சுற்றுலா தலமாகவும் உள்ள திருப்பரங்குன்றம் மதுரை மாநகராட்சியின் எல்லை விரிவாக்கத்தின் முக்கிய அங்கமாகவும், விளங்குகிறது.
பல்வேறு கிராமங்களை சூழ்ந்த திருப்பரங்குன்றம் பொது மக்கள் இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ் பெறுவதற்கு கூட தங்களது கிராமங்களில் இருந்து மதுரைக்கு சென்று வரவேண்டிய நிர்பந்தம் இருந்து வந்தது. அதிகாரிகளின் கையெழுத்து வாங்குவதற்காக ஒருநாள் செலவிட வேண்டிய நிலை இருந்தது.
மேலும் தங்களது கிராமத்தில் இருந்து மதுரைக்கு சென்று வருவதில் போக்கு வரத்து செலவு, வீண் அலைச்சல் ஏற்பட்டது. ஆகவே திருப்பரங்குன்றத்தை மையமாக கொண்டு தனி தாலுகா உருவாக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஆனால் அவர்களது கோரிக்கை பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது. குறைந்த பட்சம் 4.5 லட்சம் மக்கள் இருந்தால்தான் தனி தாலுகா உருவாக்க முடியும் என்று கூறி அதற்கான முயற்சி எடுக்கப்படாத நிலை இருந்து வந்தது.
இந்த நிலையில் மதுரை மாநகராட்சி எல்லையில் உள்ள ஜெய்ஹிந்த்புரம், மாடக்குளம், அவனியாபுரம் மற்றும் சில கிராமங்களை திருப்பரங்குன்றம் வருவாய் கோட்டத்தில் இணைக்கப்பட்டு திருப்பரங்குன்றம் தாலுகா உருவாக்கப்பட்டது.
அதை தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னையில் இருந்தபடி காணொலி மூலம் திறந்து வைத்தார்.
புதிய தாலுகா அலுவலகமானது திருநகர் 8-வது பஸ் நிறுத்தத்தில் உள்ள ஒரு வாடகை கட்டிடத்தில் செயல்பட தொடங்கியது. அங்கு மதுரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., மேயர் ராஜன்செல்லப்பா, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தர்மராஜா, முன்னாள் எம்.எல்.ஏ. சீனிவேல், உள்பட பலர் கலந்து கொண்டனர்.