'ஜித்து ஜில்லாடி..' டான்ஸ் ஆடி ‘தெறி’க்க விட்ட போலீஸ் எஸ்.பி! பார்த்ததுமே குஷியில் குத்தாட்டம்! வாவ்
திருப்பத்தூர் : திருப்பத்தூரில் 'ஜித்து ஜில்லாடி..' பாடலுக்கு குழந்தைகளுடன் குத்தாட்டம் போட்டு புத்தாண்டு விழாவைக் கொண்டாடியுள்ளார் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன். புத்தாண்டையொட்டி, ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, கட்டுப்பாடுகள் காரணமாக நகரமே வெறிச்சோடி கிடந்த நிலையில், ஒரு இடத்தில் குழந்தைகள், இளைஞர்கள் உற்சாகமாக புத்தாண்டை கொண்டாடியுள்ளனர்.
இதனைப் பார்த்ததுமே உற்சாகமடைந்த திருப்பத்தூர் எஸ்.பி பாலகிருஷ்ணன், குழந்தைகளோடு சேர்ந்து டான்ஸ் ஆட, அந்த இடமே கொண்டாட்டக் களமாகியுள்ளது.
இதையடுத்து, பொதுமக்கள், எஸ்.பிக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து அவருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்துள்ளனர். இந்நிகழ்வு அப்பகுதியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் எஸ்பி
உலகம் முழுவதும் 2023ஆம் ஆண்டை வரவேற்று புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டின. எனினும், கட்டுப்பாடுகள் காரணமாக பல இடங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன. திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் போலீசாருடன் கேக் வெட்டி புத்தாண்டை வரவேற்று அனைவருக்கும் கேக் வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

டான்ஸ் ஆடிய எஸ்.பி
பின்னர் ஹவுசிங் போர்டு பகுதியில் பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பாதுகாப்பு குறித்து ரோந்து சென்ற போது பொதுமக்களோடு சேர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக குழந்தைகளோடு 'ஜித்து ஜில்லாடி' பாடலுக்கு டான்ஸ் ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் பாலகிருஷ்ணன் ஐபிஎஸ்.

தெறி போலீஸ்
நடிகர் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்த 'தெறி' படத்தில் இடம்பெற்ற ஜித்து ஜில்லாடி பாடலுக்கு ஒரிஜினல் போலீஸே டான்ஸ் ஆடி கலக்கியது குழந்தைகளை உற்சாகமாக்கியது. அப்பகுதி மக்கள் எஸ்.பி பாலகிருஷ்ணனை பாராட்டி, அவருக்கு புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர். அப்பகுதி மக்கள் பலரும் மாவட்ட எஸ்பி பாலகிருஷ்ணனோடு செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

மகிழ்ச்சி
அப்போது பேசிய திருப்பத்தூர் எஸ்.பி பாலகிருஷ்ணன், திருப்பத்தூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் பல்வேறு இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தது. எந்த நாட்டில் இருக்கிறோம் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஏதும் இல்லையே என்று நினைத்தேன்.இங்கு பார்க்கும் போது பெரும் மகிழ்ச்சி பொங்கியது. தற்போது குழந்தைகளோடு குத்தாட்டம் போட்டது அதிக மகிழ்ச்சியை ஏற்படுத்தியது எனவும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications