ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை.. கீழே தள்ளிவிட்ட கொடூரம்.. குற்றவாளிக்கு சாகும் வரை சிறை
திருப்பத்தூர்: கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்ட வழக்கில் குற்றவாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆந்திர பிரதேச மாநிலம், சித்தூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், திருப்பூர் பகுதியில் உள்ள பனியன் தொழிற்சாலையில் தனது கணவருடன் பணிபுரிந்து வந்தார். 4 மாத கர்ப்பிணியாக இருந்த அந்தப் பெண், கடந்த பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி தனது தாயைப் பார்க்க சொந்த ஊருக்கு செல்வதற்காக கோவையில் இருந்து திருப்பதிக்கு செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் தனியாக பயணம் செய்தார். மகளிர் மட்டும் செல்லும் பெட்டியில் பயணம் செய்தார்.

வேலூர் அருகே ரயில் சென்றுகொண்டிருந்த போது மர்ம நபர் ஒருவர் அந்தப் பெட்டியில் ஏறியுள்ளார். ரயில் பெட்டியின் கழிவறையில் அந்த நபர் பதுங்கியிருந்தார். கே.வி.குப்பம் அருகே ரயில் வந்தபோது, கர்ப்பிணி பெண் கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது, அவருக்கு மர்ம நபர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், கர்ப்பிணி பெண் கூச்சலிட்டுள்ளார்.
ஆத்திரமடைந்த அந்த மர்ம நபர், கர்ப்பிணிப் பெண்ணை ரயிலிலிருந்து கீழே தள்ளியுள்ளார். இதில் காயமடைந்த பெண் அலறியுள்ளார். இதனைக் கேட்டு, அந்தப் பகுதியிலிருந்த மக்கள் சென்று பார்த்தபோது, கை மற்றும் கால்களில் படுகாயங்களுடன் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ரயிலில் இருந்த பெண்களும், காயங்களுடன் பெண்ணைப் பார்த்த பொதுமக்களும் உடனடியாக கே.வி.குப்பம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதன்பேரில் விரைந்து வந்த கே.வி.குப்பம் காவல் துறையினர், பெண்ணை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூரில் உள்ள அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதையடுத்து, கர்ப்பிணி பெண்ணிடம் விசாரணை நடத்திய போலீசார், ரயிலில் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளின் புகைப்படங்களைக் காண்பித்தனர். இதில் ஒருவரின் அடையாளத்தை அந்தப் பெண் காட்டினார். அந்த நபர், கே.வி.குப்பம் அடுத்த நாகல் ஊராட்சிக்குட்பட்ட பூஞ்சோலை கிராமத்தைச் சேர்ந்த ஹேமராஜ் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக ஹேமராஜ் 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது கைது செய்யப்பட்டார். ரயிலில் தனியாக பயணம் செய்யும் பெண்களிடம் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபடும், "ரயில் சைக்கோ கில்லர்" எனத் தெரியவந்தது. கீழே தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் வயிற்றிலிருந்த 4 மாத சிசுவின் இதயத்துடிப்பு நின்றதாக மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்து சிசுவை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றினர்.
இந்நிலையில் ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கீழே தள்ளிய ஹேமராஜை குற்றவாளி எனத் தீர்ப்பு அளித்த திருப்பத்தூர் நீதிமன்றம், அவருக்கு சாகும் வரை தண்டனை விதித்து இன்று உத்தரவிட்டது.
திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி மீனாகுமாரி, ஹேமராஜை குற்றவாளி என கடந்த ஜூலை 11 ஆம் தேதி அன்று தீர்ப்பளித்தார். இன்று (ஜூலை 14) அவருக்கு தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து ரயிலில் இருந்து தள்ளிவிட்ட ஹேமராஜ்க்கு 3 ஆயுள் தண்டனை, சாகும் வரை கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மத்திய அரசு ரூ.50 லட்சம், மாநில அரசு ரூ.50 லட்சம் இழப்பீடு என மொத்தம் 1 கோடி ரூபாய் தரவேண்டும் திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்ற நீதிபதி மீனா குமாரி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications