கொழுந்தியாள் மீது மோகம்... ‘ஆசை’ பட ஸ்டைலில் மனைவி கொலை... சிக்கிய கணவர்!
திருவட்டார் அருகே கொழுந்தியாளைத் திருமணம் செய்து கொள்வதற்காக மனைவியைக் கொலை செய்து விட்டு, மாரடைப்பு போன்று நாடகமாடிய கணவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி: கன்னியாகுமரி அருகே கொழுந்தியாள் மீது கொண்ட மோகத்தினால் மனைவியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து விட்டு, மாரடைப்பு நாடகம் போட்ட கணவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள புலவன்விளையை சேர்ந்தவர் டேவிட் சாமுவேல் (31). இவரது மனைவி ஹெப்சிபாய் (26). இவர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. வெளிநாட்டில் பிளம்பராக வேலை பார்த்து வந்த டேவிட் சமீபத்தில் தான் சொந்த ஊர் திரும்பினார்.
இதற்கிடையே ஏற்கனவே தந்தையை இழந்த ஹெப்சி, சமீபத்தில் தனது தாயையும் இழந்தார். இதனால் ஆதரவற்று இருந்த தனது தம்பி மற்றும் தங்கையை தனது வீட்டிலேயே தங்க வைத்தார் ஹெப்சி.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிகாலையில் ஹெப்சி அசைவற்றுக் கிடப்பதாக அவரது தங்கை மற்றும் தம்பியிடம் தெரிவித்துள்ளார் டேவிட். அதனைத் தொடர்ந்து ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஹெப்சியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவர் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் டேவிட் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மனைவியை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததை டேவிட் ஒப்புக் கொண்டார்.
கொலைக்கான காரணமாக அவர் போலீசில் கூறியிருப்பதாவது:-
ஹெப்சிபாயின் சகோதரி எங்கள் வீட்டில் தங்கி நர்ஸ் வேலைக்கு சென்று வந்தார். எனக்கும் ஹெப்சிபாய்க்கும் குழந்தைகள் இல்லாததால் நான் ஹெப்சிபாயின் சகோதரியை திருமணம் செய்ய விரும்பினேன். ஆனால், இதற்கு ஹெப்சிபாய் மறுத்தார். எனவே நான் அவரை கழுத்தை கயிற்றால் நெரித்து கொன்றேன். பின்னர் கொலையை மறைக்க உடல் நலக்குறைவால் மயங்கி விழுந்து ஹெப்சி உயிரிழந்ததாக நாடகம் ஆடினேன். ஆனால், பிரேத பரிசோதனையில் அவர் கொலை செய்யப்பட்டதை டாக்டர்கள் கண்டு பிடித்து விட்டனர்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து டேவிட் சாமுவேல் மீது இந்திய தண்டனை சட்டம் 302-வது பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்துள்ள போலீசார், அவரைக் கைது செய்தனர். கைதான டேவிட்சாமுவேல் பத்மநாபபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு தக்கலை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.