இப்ப என்ன அவசரம்.. உள்ளாட்சி தேர்தல் வரும்போது கூட்டணி பற்றி முடிவு செய்யப்படும் - வாசன்
சேலம்: உள்ளாட்சி தேர்தல் சமயத்தில் யாருடன் கூட்டணி என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து சட்டசபைத் தேர்தலை சந்தித்தது தமாகா. ஆனால் தேர்தலில் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தது.எங்குமே டெபாசிட் கிடைக்கவில்லை. 26 இடங்களில் போட்டியிட்டு பெரும் தோல்வியே அதற்குப் பரிசாக கிடைத்தது. ஒரு சதவீத வாக்குகளைக் கூட அதனால் வாங்க முடியவில்லை. இதையடுத்து மக்கள் நலக் கூட்டணியை விட்டு வெளியேறியது தமாகா.

இந்நிலையில், சேலம் மாவட்டம் ஓமலூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மண்டல ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகளை நாங்கள் பின்னடைவாக கருதவில்லை. மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம். வரும் காலங்களில் இதை எங்களின் பலமாக கருதி மக்கள் பணியாற்றுவோம்.
தமிழகத்தில் கொலைகள் அதிக அளவில் நடைபெற்று வருவதாக பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளில் தினமும் பார்த்து வருகிறோம். இது கவலை அளிப்பதாக உள்ளது. இதை தமிழக அரசும் காவல் துறையும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். அப்போது தான் மக்கள் மத்தியில் காவல் துறையினர் நம்பிக்கையை பெற முடியும்.
குளைச்சல் துறைமுகம் புதிதாக கொண்டு வந்ததற்கு மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனுக்கு எனது வாழ்த்துக்களை கூறிக்கொள்கிறேன். அதே போன்று தர்மபுரியில் ராணுவ தளவாட தொழிற்சாலை அமைக்க நிதி ஒதுக்கியும் இதுவரை கொண்டு வரவில்லை. விரைவில் அமைக்க கேட்டுக்கொள்கிறேன். சேலத்தில் ஜவுளி பூங்காவை அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேலம் மாநகரத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்க விரைவில் ரிங் ரோடு அமைக்கும் பணியை தொடங்க வேண்டும். ஓமலூரில் இருந்து சங்ககிரி செல்லும் சாலை மற்றும் ஓமலூர்-மேச்சேரி செல்லும் சாலை நான்கு வழி சாலையாக மாற்றப்படும் என்று கூறி பல ஆண்டுகள் ஆகி உள்ளது. இந்த திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
உள்ளாட்சி தேர்தல் சமயத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். கட்சியை பலப்படுத்தும் வேலையில் முக்கியமாக ஈடுபட்டு வருகிறோம். இவ்வாறு வாசன் கூறினார்.












Click it and Unblock the Notifications