சிதறுகிறது தமாகா.... ஞானதேசிகன், ஞானசேகரன் தலைமையில் அதிமுகவுக்கு தாவ நிர்வாகிகள் முடிவு?
சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ஞானதேசிகன், ஞானசேகரன் உள்ளிட்டோர் தலைமையில் நிர்வாகிகள் பலரும் அதிமுகவுக்கு தாவ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தியது தமிழ் மாநில காங்கிரஸ். ஆனால் தமாகா கேட்ட தொகுதிகளைத் தருகிறோம்; இரட்டை இலை சின்னத்தில் நிற்க வேண்டும் என நிபந்தனை விதித்தது அதிமுக.
இதை ஏற்காமல் திடீரென மக்கள் நலக் கூட்டணி- தேமுதிக அணியில் தமாகா இணைந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பீட்டர் அல்போன்ஸ், காஞ்சிபுரம் விஸ்வநாதன் ஆகியோர் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே திரும்பினார். மற்றொரு மூத்த தலைவரான எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், அதிமுகவுக்கு தாவிவிட்டார்.
உட்கட்சி குழப்பம்
சட்டசபை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி- தேமுதிக- தமாகா அணி படுதோல்வியைச் சந்தித்தது. தமாகாவின் எதிர்காலத்தையே கேள்விக்குள்ளாக்கிவிட்டது தேர்தல் முடிவுகள்... இதனால் தமாகாவில் உட்கட்சி குழப்பம் அதிகரித்துள்ளது.
தாவுவது இவர்கள்...
தற்போதைய நிலையில் அக்கட்சியின் மூத்த தலைவர்களான ஞானதேசிகன், வேலூர் ஞானசேகரன், விடியல் சேகர், கோவை மகேஸ்வரி உள்ளிட்டோர் அதிமுகவுக்கு தாவ முடிவு செய்து அக்கட்சி தலைமைக்கு கடிதம் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் ஞானசேகரனும் மகேஸ்வரியும் அப்படியெல்லாம் கடிதம் கொடுக்கவில்லை என்கின்றனர்.
ஞானதேசிகன் கோபம்
அதுவும் ஞானதேசிகன், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்தாலும் கூட வாசனின் நிழலாகத்தான் இருந்தார்... அப்படி ஒரு விசுவாசியாக இருந்தவர். தேர்தலின் போது, அதிமுக சொல்கிறபடி இரட்டை இலை சின்னத்திலேயே நிற்கலாம் என ஐடியா கொடுத்தவரும் இவரே.
இதனை வாசன் நிராகரித்தது முதலே அவர் படுஅப்செட்டாம். இப்படி ஒரு முடிவை வாசனிடம் திணிக்க முயற்சித்ததால் தமாகாவில் பலரும் ஞானதேசிகனை சகட்டுமேனிக்கு விமர்சித்து வருகின்றனர். இதனை வாசன் கண்டுகொள்ளாமல் இருக்கிறார் என்பதுதான் ஞானதேசிகனுக்கு இப்போது இருக்கும் கோபமாம்.
திமுகவுக்கும் தாவல்
அதேபோல் மேலும் சில நிர்வாகிகள், திமுகவுக்கு போய்விடலாம் என்கிற முடிவிலும் இருக்கிறார்கள்.. இப்போதே கட்சி மாறினால்தான் அடுத்த தேர்தலில் ஏதேனும் ஒரு வாய்ப்புக்கு அடிபோட்டு வைக்க முடியும் என்பது இவர்களது கணக்கு. ஆக விரைவில் தமாகா சிதறுவது உறுதி என்றே கூறப்படுகிறது.