அதிமுக கூட்டணியில் இணையுமா த.மா.கா.? 23-ந் தேதி பேச்சுவார்த்தைக்கு வருமாறு வாசனுக்கு அழைப்பு
சென்னை: கூட்டணியில் இணைவது தொடர்பாக மார்ச் 23-ந் தேதியன்று பேச்சுவார்த்தைக்கு வருமாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனுக்கு அதிமுக தலைமை அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியானது அதிமுக, மக்கள் நலக் கூட்டணி, தேமுதிக ஆகிய கட்சிகளுடன் தொடர்ச்சியாக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளை விட 1 தொகுதியாவது கூடுதலாக பெற வேண்டும் என்பது தமாகா தலைவர் வாசனின் விருப்பம்.
அத்துடன் தம்மை நம்பி வந்துள்ள மூத்த தலைவர்கள், தொழிலதிபர்கள் என பலருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்க வேண்டும் எனவும் ஜி.கே.வாசன் கருதுகிறார். இதற்கேற்ப கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறார்.
அதிமுகவுடன் அதிகாரப்பூர்வமற்ற முறையில் நடத்திய பேச்சுவார்த்தையில் 25 தொகுதிகளை ஜி.கே.வாசன் தரப்பு கேட்டிருக்கிறது. ஆனால் அதிமுகவோ அதிகபட்சமாக 8 தொகுதிகளைத்தான் தர முடியும் என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இதில் வாசன் அதிருப்தி அடைந்திருக்கிறாராம். இதனால்தான் கடந்த ஞாயிறன்று கூட்டணிக் கட்சித் தலைவர்களை ஜெயலலிதா சந்தித்த போது வாசனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்கிறது அதிமுக வட்டாரங்கள்.
இந்த நிலையில் கூட்டணி குறித்து வரும் 23-ந் தேதி பேச்சுவார்த்தைக்கு வருமாறு வாசனுக்கு அதிமுக தலைமை அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்பை ஏற்று வாசனும் ஜெயலலிதாவை சந்திக்க முடிவு செய்திருக்கிறாராம்.
அதே நேரத்தில் காங்கிரஸுக்கு இணையாக அல்லது அதைவிட கூடுதல் தொகுதிகள் கொடுக்கும் நிலையில்தான் அதிமுக கூட்டணியில் நீடிக்க முடியும் என்கிற சூழலையும் ஜெயலலிதாவிடம் தெரிவிக்கவும் வாசன் ஆலோசித்து வருவதாக தமாகா வட்டாரங்கள் கூறுகின்றன.
ஆகையால் வரும் 23-ந் தேதி ஜெயலலிதாவை வாசன் சந்தித்தாலும் அதிகாரப்பூர்வமாக கூட்டணி என அறிவிக்கும் வரை இழுபறி நீடிக்கவே செய்யும் என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.