உயிர் பறிக்கும் டெங்கு.. போர்க்கால அடிப்படையில் அரசு செயல்பட தமாகா கோரிக்கை
தூத்துக்குடி: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் மிக வேகமாகப் பரவி பல உயிர்களைப் பறித்து வருவதால் ஒதை ஒழிக்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் யுவராஜா கூறியுள்ளார்.
தூத்துக்குடிக்கு வந்த யுவராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக டெங்குகாய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குழந்தைகள், இளைஞர்கள் என பலர் டெங்குவினால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்துள்ளனர். டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுத்திடும் பணிகளை போர்க்கால அடிப்படையில் அரசு மேற்கொள்ளவேண்டும்.

ஸ்ரீவைகுண்டம் அணையில் தூர் வாரும் பணி என்ற பெயரில் மணல்கொள்ளை நடந்து வருகிறது. பசுமை தீர்ப்பாயம் எச்சரித்த பின்பும் மணல் கொள்ளையானது அரசின் துணையோடு நடந்து வருகிறது. தூர் வாரும் பணியில் நடந்துவரும் முறைகேடுகள் மற்றும் மணல்கொள்ளையை தமிழக அரசு உடனடியாக தடுக்காவிட்டால் வரும் நாட்களில் தமாகா சார்பில் அணையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்.
தமிழகத்தில் சீன பட்டாசு விற்பனையை தடுக்க குழு அமைக்கப்பட்டுள்ளபோதும் போலீசாரின் துணையோடு ஆங்காங்கே சீன பட்டாசு விற்பனை நடந்து வருகிறது. இதற்கு முடிவுகட்ட சீன பட்டாசுகளை விற்பனை செய்பவர்களை கைது செய்திடவேண்டும். அரசு இதனை தீவிரமாக கண்காணித்து தடுத்திடவேண்டும்.
தமாகாவின் இரண்டாம் ஆண்டு துவக்கவிழா வரும் 30ம் தேதி கடலூர் மஞ்சக்குப்பத்தில் நடைபெறவுள்ளது என்றார். பேட்டியின்போது தூத்துக்குடி மாவட்ட தலைவர்கள் வடக்கு கதிர்வேல், தெற்கு எஸ்.டி.ஆர்.விஜயசீலன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.












Click it and Unblock the Notifications