அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு 1,200 புதிய பேருந்துகள்: சென்னையில் மேலும் 100 மினி பஸ்கள்
சென்னை: 2014-2015ஆம் ஆண்டில் தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 253 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் 1,200 புதிய பேருந்துகள் வாங்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
100 புதிய சிற்றுந்துகள் 16 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்பட்டு, சென்னை மாநகரில் உள்ள, பல்வேறு வழித் தடங்களில் இயக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா இன்று படித்த அறிக்கையில்,
"கடந்த மூன்று ஆண்டு காலத்தில், 1,476 புதிய வழித் தடங்கள் துவக்கி வைக்கப்பட்டதோடு, 4,649 புதிய பேருந்துகள், 712 புனரமைக்கப்பட்ட பேருந்துகள் மற்றும் 107 சிற்றுந்துகள் வாங்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. தமிழக போக்குவரத்துத் துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மாநிலம் முழுவதும் 20,684 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

1200 புதிய பேருந்துகள்
இந்நிலையில், தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகளை நவீனப்படுத்தும் வகையில், பல ஆண்டுகளுக்கு மேல் இயக்கப்படும் பழைய பேருந்துகளுக்கு பதிலாக புதிய பேருந்துகளை இயக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக 2014-2015ஆம் ஆண்டில், 253 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் 1,200 புதிய பேருந்துகள் வாங்கப்படும்" என்றார்.

100 மினி பஸ்கள்
சென்னை மாநகர மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், போக்குவரத்து இணைப்பில்லா பகுதிகளிலிருந்து அருகிலுள்ள பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் விமான நிலையத்தை இணைக்கும் வகையில் 100 சிற்றுந்துகள் வாங்கப்பட்டு, மக்களின் பயன்பாட்டிற்காக இயக்கப்பட்டு வருகின்றன.

ரூ.16 கோடியே 75 லட்சம்
இதற்கு சென்னை மாநகர மக்களிடையே ஏகோபித்த வரவேற்பு இருப்பதை கருத்தில் கொண்டும், பெருகி வரும் மக்கள் தொகையை கணக்கில் கொண்டும், மேலும் 100 புதிய சிற்றுந்துகள் 16 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்பட்டு, சென்னை மாநகரில் உள்ள, பல்வேறு வழித் தடங்களில் இயக்கப்படும்.

ஆர்டிஓ அலுவலகங்கள்
மாவட்ட தலைநகரங்களுக்கு இணையாக சில மாவட்டங்களின் இதர பகுதிகளில் மக்கள் தொகை, தொழில் வளர்ச்சி, வாகனங்களின் எண்ணிக்கை ஆகியவை அதிகரித்துள்ளன. இந்தப் பகுதிகளில் உள்ள மக்கள், ஓட்டுநர் உரிமம், நடத்துநர் உரிமம், புதிய வாகனம் பதிவு செய்தல் போன்ற பணிகளுக்காக வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு செல்ல 15 கிலோ மீட்டர் முதல் 40 கிலோ மீட்டர் வரை பயணம் செய்ய வேண்டி உள்ளது.

உசிலம்பட்டி, திருத்தணி
இதனை களையும் வகையில், 2 கோடியே 79 லட்சம் ரூபாய் செலவில், மண்மங்கலம், உசிலம்பட்டி, திருத்தணி மற்றும் செய்யார் ஆகிய பகுதிகளில் புதிய பகுதி அலுவலகங்கள் உருவாக்கப்படும் என்பதையும், சிதம்பரம் மற்றும் திருச்செயதூர் ஆகிய இடங்களில் உள்ள பகுதி அலுவலகங்கள், 1 கோடியே 55 லட்சம் ரூபாய் செலவில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களாக தரம் உயர்த்தப்படும்" என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications